இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு -1

2 posters

Go down

பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு -1 Empty பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு -1

Post by ஆனந்தபைரவர் Mon Sep 13, 2010 10:15 pm



கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் கந்தவேள் எனப்படும் செந்தில் முருகனே-

செந்தில் முருகனைச் சிந்தையில் பரவி செகத்தில் வாழ்வோர்
அந்தமில் வீடு பேற்றை அடைவர்.

அண்டங்களைக் காக்கும் ஆண்டவனை இதயப் பிண்டத்தில் இருத்தி வழிபட்டோர் பெருமைக்கு எல்லை ஏது? அதனாலன்றோ கல்வியிற் சிறந்த ஒளவை மூதாட்டி

"தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்று வியந்துரைத்தாள். அடியார்கள் வானில் அரசாள்வர் என ஆணையிட்டுரைத்தவர் அன்று திருஞான சம்பந்தர். அப்படிப்பட்ட அடியவர்கள் வரலாற்றை எல்லாம் அறிந்து தெரிந்து உணர்ந்து நெகிழ்ந்து வணங்கி வழிபடுவோர் மண்ணில் விண்ணை மலரச் செய்யும் ஆற்றல் பெறுவர் என்பது சத்தியம்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்றார் அருணகிரிநாதர்-

"ஞான உபதேசம் புரிந்திடுதல் ஒன் வேற்கையான்" என்றார் மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். "குமரகுரு தானே கொடுக்கும் நலங்கால்" என்றார் குருமகாசக்ரவர்த்தி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் - குமரகுருவாகிய ஆறுமுகச்சிவனின் உபதேசம் பெற்று அவன் தாசன் எனத் தன்னை தவத்தீயால் ஆகுதி செய்து கொண்டு சிவப் பேரொளியாய் செகத்தில் உறைந்தார், மறைந்தார், நிறைந்தார் - அவர் யார்?

தவம் செய்த தவத்தாலே தோன்றிய அவர்தான் திருத்தேவையம்பதி எனப்படும் இராமேசுவரத் தீவில் 1851க்கும் 1853க்கும் இடையில் சிவாலயத்திருப்பணி பூண்டொழுகிய சாத்தப்பிள்ளைக்கும், செங்கமலத் தாய்க்கும் திருமகனாய் அவதரித்த அப்பாவு! ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒருவனின் அருள் பெற்று ஒரு தெய்வ வழிபாட்டு மாட்சியை இத்தமிழ் உலகுக்குணர்த்தியவர். எப்பாவையும் தப்பாது பாடி அதை எந்தை முருகனின் திருப்பாதங்களில் சூடி அவன் அருளென்னும் ஆழியிலே ஆடி அருந்தவத்தால் வாடி நாமெல்லாம் நலம் பெருவதற்கு விவேகர்வாழ் திருவான்மியூரில் கூடிக் குளிர்ந்த மிளிர்ந்த பொலிந்த குருமகாசக்ரவர்த்தியாம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் பூர்வாசிரமப் பெயரே "அப்பாவு" என்பதாம்- சுவாமிகள் முனியாண்டியாபிள்ளை எனும் தமிழாசிரியரிடம் தமிழ் கற்றார்கள்.ஒரு நாள் பொழுது விடிந்தது. பொற்கோழி கூவிற்று. சீவனோடு சிவமணம் கலந்து மாநுடம் தழைக்க மண்ணும் மலர்ச்சி அடைந்தது அன்று. சுவாமிகள் தென்னந் தோப்பு வாயிலை அடைந்தார். தந்தையார் சென்றிருப்பதை அறிந்து அங்கே நின்று கீழ்வானத்தை நோக்கினார். கையில் உள்ள சஷ்டி கவசம் நூலை பார்த்து தானும் இவ்வாறே பாடிப்பரமனருள் பெற எண்ணம் கொண்டார். செஞ்சுடரோனின் எழுச்சி செவ்வேட்பரமனை நினைவூட்ட சுவாமிகள் வடக்கு முகம் நோக்கி திரும்பி பனையோலையை நறுக்கி எழுத்தாணியை கீறி சரிபார்த்துக் கொண்டார். ஒவ்வொரு பதிகத்தையும் அருணகிரிப் பெருமானின் பெயர் கொண்டு முடிப்பேனாக உனைப் பாடும் பணியை எனக்கருள்க என வேண்ட அடுத்தகணம் வானில் "கங்கையைச் சடையிற் பரித்து" எனும் மங்கல ஒலி எழுந்தது, மண்ணில் விண் மலர்ந்தது, சுவாமிகள் அந்த அடியையே முதலாகக் கொண்டு தன் முதற் பாடலை மொழிந்தார்கள். அப்பாடல் முதல் மண்டலமாகிய குமரகுருதாச சுவாமிகள் பாடல் தொகுப்பில் "அமரர்கோ" எனும் தலைப்பின் கீழ் உள்ள பதிகத்தின் முதற் பாடலாய் அமைந்தது. பரஞானத்திற்கு முன்னெய்தும் அபரஞானத்தின் ஆழத்தை ஆன்மாவாகிய நமக்கு உணர்த்துகிறது.

"கங்கையைச் சடையிற் பரித்து மறி மழுவும்
கரத்தில் தரித்துருத்ரங்
காட்டுஉழுவை அதளசைத் தணிமன்றி லாடுகங்
காளற்கு பின்னமாய
சங்கரி சடாதாரி சருவாணி கல்யாணி
தற்பரி பவானிதந்த
தந்திமுகனோடுமற்று ஐந்துபெயர் நீர்மையும்
தன்னகத்துள தெய்வமே
மங்கையர்தம் இன்பெனும் துன்பினை விரும்புமட
மார்க்கத்தை விட்ட அதீதர்
வாழ்வுக்கும் வாழ்வாய வாழ்வினை அளிக்கும்உன்
மலரடி தியானிக்கவும்
அங்கையினி ல்நெல்லியங் கனிஎனத் திருவருளை
அடையவும் கருணை நல்காய்
அருமறை புகழ்ந்த திரு முருகசிவ சரவணத்து
ஆதியே அமரர் கோவே. "

அப்பாடலை அதே இடத்திலே ஒருமுறை உரக்கப் படித்துவிட்டு எந்தையே! இதை ஏற்றருள்க! என்று வேண்டினார் நமையெல்லாம் நன்னெறி நடக்கத் தூண்டினார். சுவாமிகள் பாடலில் தோய்ந்து ஆய்ந்த முனைவர் பேராசிரியர் சபாரத்தினம் ஐயா அவர்கள் வியந்து கூறியது. "அருணகிரிப் பெருமானின் அருட்சொல்வளம், பட்டினத்து அடிகளாரின் பற்றின்மையாம் பாங்கு. தாயுமானவ சுவாமிகளின் தத்துவ வளம், இம்மூன்றும் திரண்டு ஓரு வடிவெடுத்தால் எப்படி இருக்கும்? - பாம்பன் ஸ்ரீமத் குமர குருதாச சுவாமிகள் பாடலாகச் காட்சியளிக்கும்". சுவாமிகள் அருளிய பாடல்கள் 6666. ஆறுமுகம் கொண்ட செவ்வேட் பரமனுக்கு ஆறுபடை வீடு கொண்ட அழகனுக்கு ஆறாதாரங்களிலும் அருள்மணம் பூத்துக் கனிய சுவாமிகள் வழங்கிய படையல் 6666. இப்பேறு வேறெந்த அருளாளரும் பெறவில்லையே? 1. முதல் மண்டலம் - குமரகுருதாச சுவாமிகள் பாடல்

2. இரண்டாம் மண்டலம் - திருவலங்கற்றிரட்டு 2 கண்டங்கள்

3. மூன்றாம் மண்டலம் - காசியாத்திரை, பரிபூரணானந்தபோதம், தகராலய ரகசியம்

4. நான்காம் மண்டலம் - சிறுநூற்றிரட்டு, திருத்தலத்தரிசனத்தின் போது பாடிய கட்டளை கலித்துறை, சேந்தன்செந்தமிழ், பத்துப் பிரபந்தம், குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி, குமாரஸ்தவம், செக்கர் வேள் செம்மாப்பு, செக்கர் வேளிறுமாப்பு, சீவயாதனா வியாசம்.

5. ஐந்தாம் மண்டலம் - திருப்பா

6. ஆறாம் மண்டலம் - ஸ்ரீமத் குமார சுவாமியம்

இப்படி ஆறாயிரத்தறுநூற்றறுபத்தாறு பாக்களைச் செவ்வேட் பரமனுக்கு சூட்டிய பெருமையோடு சாத்திர நூல்களாகத் திருப்பா, பரி்பூரணானந்தபோதம், தகராலய ரகசியம் எனும் மூன்று நூல்களையும் சுவாமிகள் நமக்கு வழங்கினார். வடமொழி நூலார் மரபையொட்டி திருப்பா முதல் 10 பாடல்களுக்கு "திட்பம்" எனும் உரையும் பரிபூரணானந்தபோதத்துக்கு சிவசூரியப்பிரகாசம் எனும் உரையும் தகராலய ரகசியத்துக்குச் சதானந்த சாகரம் என்ற உரையும் வழங்கி உரையாசிரியர் ஆனார்கள். காசியாத்திரை என 608 பாடல்கள் பாடி முதற் பயண நூல் படைத்தவர் ஆனார்கள். 1906 ஆண்டு வடமொழி தவிர்த்து 50 வெண்பாக்களில் "சேந்தன் செந்தமிழ்" பாடி முதல் தனித்தமிழ் பனுவல் படைத்த "பாமணி" ஆனார்கள்.

சைவசமயசரபம்,நாலாயிரப்பிரபந்த விசாரம் படைத்ததன் மூலம் வாதநூல் வல்ல "பரசமயக் கோளறி" ஆனார்கள்.

கு-எனில் அறியாமை, ரு-எனில் அதைப் போக்குபவன்
கு-எனில் குணம், ரு-எனில் ரூபம், குணமும் ரூபமும் கொண்டவன் குரு - அவனை வழிபடுவோர்க்கு இவ்விரண்டு நலனையும் அருள்வான்.

கு-குருடு, ரு-அறிவு ஒளி-குருட்டு விழிக்கு அறிவு ஒளி அளிப்பவனே குரு.
அவனை நாட அவனருள் கூட அவன் பாடிய 6666 பாடல்களுமே நமக்குத் துணை - ஜனனக் கடல் கடக்க நாம் பிடிக்கும் புணை, துணை, எல்லாம் அவையே!

ஆறாயிரத்தருநூற்றறுபத்தாறையும் பாடிப் பரவிப் பரமனை வழிபடுவோர் - இகபர சௌபாக்கியங்களையும் பெற்று மரணமிலாப் பெருவாழ்வாம் மாண்படைவர்.

தமிழகத்தில் தோன்றிய தவசீலர்களில் சுவாமிகள் ஒருவரே தமது பாடல்களுக்கு இன்னின்ன பலன்கள் கிட்டுமென்று வரையறுத்து வாக்களித்தவர், முருகனிடம் வாக்குறுதி பெற்றவர்.

"நான் பாடு பாட்டை நவில்பவர்க்கு நலம் நல்காய்
கான்பாடு வண்டறையும் கழுகுமலை முருகா"

"எனைத் தள்ளினாலு மெனை நம்பினவர்த் தள்ளேல்
கனைத் தண்டை சிலம்ப வரும் கழுகுமலை முருகா"

துன்புறுத்தும் நோயிலிருந்து விடுபடக் - குமாரஸ்தவம்

உலகில் நடைவருத்தும் பகைஒழிய - பகைகடிதல், சங்கடம் தரும் வழக்கு, சதிகாரர்களின் சழக்கு, வழிச்செலவில் வரும் ஆபத்து இவை களிலிருந்து நமைக் காக்க - சண்முக கவசம்

மகப்பேறு பெறுவதற்கு - வேற்குழவி வேட்கை

பாபநாசம், சத்துருநாசம் ஆயுள்விருத்தியுடன் சர்வார்த்த சித்தியும் முக்தியும் பெற- -- அட்டாட்ட விக்ரக லீலை பாராயணம் செய்து பயன்பெறுவீர் பக்தர்களே!

இவ்வாறு நாள் தோறும் உணவு உண்பதற்கு முன் ஒள்வேள் கடவுளாகிய ஒப்பற்ற முருகனுக்கு வாடும் பூமாலை சூட்டாமல் வாடாப் பாமாலை சூடி வழிபட்டார் அப்பாவு எனும் குமரகுருதாசர் - அப்பொழுது சுவாமிகள் பெற்ற பேரின்பம் தான் என்னே?

பாடியே அறியா எளியேன் வாய்
பாடலுள் கிருபை எனவும் நினைந்தேன்
நேடியே அறியாத என் நினைவு
நினை நினைந்திடல் கருதியும் மகிழ்ந்தேன் -

இவ்வாறு பாடலோர் பாடி முடித்தபின் அவற்றை ஒரு நோட்டுப்புத்தகத்தில் சுவாமிகள் எழுதி வைத்திருந்தார்கள் .
சடக்கர உபதேசம்

நெல் வியாபாரம் ஒரு முகம்மதியரையும் கூட்டாளியாகக் கொண்டு பாம்பனில் தந்தையார் சொற்படி செய்து வருங்கால், அவண் வந்த செவ்வேட் பரமனடியார் சேது மாதவப் பெருமாள் கோயில் அர்ச்சகர் சேதுமாதவ ஐயர் என்பவர் சுவாமிகள் பாடல்கள் எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துப் படித்து புதுக்கோட்டை வித்துவான் குமாரசாமிப் பிள்ளையிடம் அளிக்க அவர் பார்வையிட்டு பாடல் நயமுடையது, துறவு நோக்கமுடையது, பதிப்பிக்கத் தக்கது எனப் பாராட்டி சாற்றுக் கவியும் வழங்கினார். பின்னர் பாம்பன் வந்து சேதுமாதவ ஐயர் நாளை விசய தசமி இன்று மாலை என் இல்லம் வா எனக் கூறிச் சென்றார். அவ்வாறே அப்பாவு தப்பாமல் அன்றிரவு சேதுமாதவ ஐயர் இல்லத் திண்ணையிற் இறங்கி மறுநாட்காலை இளங்காலைப் போதில் அக்னி தீர்த்தத்தில் மும்முறை மூழ்கி எழ ஐயர் திருவாறெழுத்து மந்திரத்தை அப்பாவுவுக்கு உபதேசித்து அருளினார். ஆசிரியரை வணங்கி அவர் அளித்த திருநீற்றை அருட்பிரசாதமாய்ப் பெற்று மகிழ்ந்த பொழுது அவர் உடன் "வடமொழி கற்பாயாக" என உத்தரவும் இட்டார்
வடமொழியின் மாண்பு
வடமொழியும் தென்மொழியும் நாவலந்தீவு நார்களுக்கு வாய்த்த இரு கண்களாம். இவ்வுண்மை உணராது வடமொழியைத் தூடனை புரிவோர் குமுகாயப் புண்களாம். வடமொழி கல்லாதவரைத் திருஞான சம்பந்தர் "மந்திபோற்றிரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்" என இழித்துரைத்தல் காண்க. பாம்பன் சுவாமிகள் திருஞானசம்பந்தர் வாக்கிற்கேற்ப வடமொழி கற்று இருகண்களையும் பெற்றார். நமக்கு அதனைச் சொன்னார். திருப்பா நூன் முகத்தில் சுவாமிகள் கூற்று "நமா ஆர்ந்த கடவுளுடைய நாமார்ச்சனத்திற்கும் நாம மந்திர செபத்திற்கும் சத்திபீஜ மணைந்த மந்திர செபத்திற்கும் பிறமந்திரங்கட்கும் அங்கியை முன்னிட்டு ஒற்று உத்திரகிரியைக்கும் வடமொழியே முக்கிய உதவியாகவும் இருத்தலின் இவ்விருதிறமுந் தமிழர் கொண்டுய்பவரே யாவர்" திருப்பா பக்கம் 17.

சுவாமிகள் வடமொழியறிவு பெற்றதனாலேயே சாம வேதத்திலே சுவாமி என அழைக்கப்பட்ட சிறப்பு ஆறுமுகச் சிவனுக்கே கிட்டியது என்பதைப் பாடலாய்ப் பாடியருளினார். தன் சாத்திர நூல்களில் எல்லாம் வேதாகம உபநிடதக் கருத்துக்களை மேற்கோளாக எடுத்துக் காட்டி குகபரத்துவக் கொள்கையை நிருவியருளினார். பிறப்பாலுயர்வு தாழ்வு இல்லையெனும் கருத்தை சாமவேத வஜ்ரஸுசிகோப நிஷதம் கொண்டு பரிபூரணானந்த போதம் நூலில் பகர்ந்தார். சைவசித்தாந்த பொதிவு என்ற ஆங்கில நூலில் வார வழிபாட்டின் தந்தை சைவப்பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளையவர்கள் (என்ஆசான்) பாம்பன் சுவாமிகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியது. "Mean while he became well-versed in upanishdic and Agamic Love in Sanskrit" என்றுரைத்தல் காண்க. (TALKS ON SAIVA SIDDHANTA) தமிழ்த் தென்றல் திரு.வி.கவும் சுவாமிகளின் வடமொழிப் புலமையை தன் வாழ்க்கைக் குறிப்புகள் நூலில் குறிப்பிடுகின்றார்.

"பாம்பன் சுவாமிகள் என்பவர் பாம்பனில் தோன்றிய குமரகுருதாச சுவாமிகள்-சுவாமிகள் வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் முழுதொருங்குண்ட காளமேகம்"

"குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்" திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127.

சுவாமிகள் வடமொழியிலியற்றிய "குமாரஸ்தவம்" தௌத்தியம், அட்டாட்ட விக்கிரகலீலை போல்வன என்றும் பாராயணத்திற்குரிய பனுவல்களாய் விளங்குகின்றன.
கனவு கண்டார் "கனவதிகாரம் விண்டார்"- இல்லறமும் நன் மக்கட்பேறும்




சுவாமிகள் வாழ்வில் பல கனவுகள் தோன்றிக் குறிப்பு உணர்த்துகின்றன.இறையருள் பெற்றோர்க்குத் îதான்றும் கனவுகள் பலிக்கும். அஃதில்லார் கானும் கனவுகள் வெறும் கானல் நீராய் மறையும்,

சுவாமிகள் வாழ்வில் கண்ட கனவுகள்:
கனவு1. அழகிய திருமேனிச் சைவர் ஒருவர் தோன்றி இவரை அழைத்துச் சென்று வாழையிலை போட்டு அன்னமும் பாலும் கலந்தளித்து "இதை நீ உண்பாயாக" எனக் கட்டளையிட இவரும் உண்டு மகிழ்ந்தார். அதன்பின் கவிபாடும் ஆற்றல் தன்னுள் மிகுந்ததை உணர்ந்தார்.

கனவு 2. சுவர்க்க நரகக் கனவு: பாம்பன் பதியில் வாழுங்கால். ஓர் நாள் கனவில் ஒரு பாதை வழியே செல்ல அப்பாதை பிரிந்து வேறோர் பாதை தோன்ற இவர் அவ்வழியே சென்றார். கற்றாழையும் கள்ளியும் நிறைந்த காட்டை கண்டார். கருநிறத்தவர்களாய் கரித்துணிகளை அணிந்திருந்த சிலர் தன் மீது கல்லையும் மணலையும் வீசி எறிவதையும் ஏசுவதையும் கண்டார். பலத்த தேகிகள் மூவர் இவரை அணுகி "எம்முடன் வருக" என அழைத்து தென்திசை நோக்கி நடந்தனர். மூவருள் இருவர் இவர் இரு கரங்களையும் நன்கு பற்றிக் கொண்டனர். எதிரே தூய வெண் மணற் பூமி காணப்பட்டது அங்கே நறுமனம் வீசக் கனிமரங்கள் பல நிறத்தவாய்க் கண்டார். அங்குள்ள மாந்தர் அக்கனிகளை உண்ட வண்ணம், ஒருவரோடொருவர் அளவிளாவி மகிழ்கின்ற காட்சியையும் கண்டார். சுவர்க்க நரகங்கள் உண்டென்பதையும் அது குறித்து விசாரம் கொள்ளா வேண்டாமென்பதையும் உணர்த்திட இக்கனவு தோன்றியதாகச் சுவாமிகள் அறிந்து மகிழ்ந்தார். பாம்பன் சுவாமிகள் கனவில் வந்து அடியார்க்கு அருளிய அருளாடல்கள் பல. சுவாமிகள் கனவில் வந்து தீட்சை கொடுத்தோக வாரியார் சுவாமிகள் தன் வாழ்க்கை வரலாற்று நூலிற் கூறுகின்றார்." நான் சிறிது நேரம் தேவாரம் கேட்டுவிட்டு ஒரு அன்பர் வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கினேன். விடியற்காலை 4 மணிக்கு நான் ஒரு வயல் வெளியில் சென்று கொண்டிருந்த பொழுது பாம்பன் சுவாமிகள் அங்கு வந்து எனக்கு சடக்கர மந்திரம் கனவில் உபதேசித்த காரணத்தினால் சென்னையில் என் இல்லத்தில் பூஜை அறையில் நடுவில் முருகன் திருவுருவமும் ஒரு புறம் அருணகிரிநாதர் திருவுருவமும் மற்றொரு புறம் பாம்பன் சுவாமிகளின் திருவுருவமும் வைத்து இன்றும் வழிபடுகின்றேன் வழிபாட்டின் போது பாம்பன் சுவாமிகளின் திருவருளை நினைந்து கண்ணீர் வடிப்பேன். வாரியார் வாழ்க்கை வரலாறு(பக்கம்-19).

இல்லறமும் நன் மக்கட்பேறும்
இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது இவர் உள்ளம் துறவறத்தையே விரும்பிய போதிலும் சேதுமாதவரின் கட்டளைப்படி இவர் திருமணம் ஏற்றார். மதுரை சின்னக் கண்ணு பிள்ளை மகளாகிய திருநிறைச் செல்வி காளிமுத்தம்மாளை வெகுதான்ய ஆண்டு வைகாசித்திங்கள்(கி.பி.1878) மங்கல ஓரையில் இராமநாதபுரத்தில் மணம் செய்து கொண்டார். 3 ஆண்டுகளுக்குப்பின் முருகையபிள்ளையும் சிவஞானாம்பாளும் பின் குமரகுருதாச பிள்ளையும் பிறந்தனர். சுவாமிகள் தன் ஞானவாக்கியத்தில் "சேய்பெண்டு சுற்றம் மாய்கின்ற மட்டும்" என்றும் "ஞண்டுச் சூல் போல் ஒண்டொடி விழைவு" என்றும் உரைத்துள்ளமையால் அவர் உள்ளம் எஞ்ஞான்றும் துறவறத்தையே விரும்பியது என்பதை நாம் அறியலாம்.
துறவு நசையும் தூயோன் வசையும்




சுவாமிகள் துறவு விழைந்து இருக்குங்கால் நண்பர் அங்கமுத்துப்பிள்ளை அவன் வரத் தன் எண்ணத்தை மறைத்து "நாளை நான் பழநிபதி செல்லவுள்ளேன்" எனக் கூறியதும் நண்பர் "மீண்டெப்போது வருவீர்கள்?" என சுவாமிகள் "சொல்ல இயலாது" என்றார். உடனே நண்பர் தடுத்து "இது குமரக் கடவுள் கட்டளையோ? என வினவச் சுவாமிகள் துறவு வேட்ககையால் "ஆம்" எனத் தலையசைத்தார். அடுத்தகணம் சுவாமிகள் விண்ணை நோக்க அங்கே முருகப் பெருமான் முகத்தில் வினைக்குறி தோன்ற "எனது கட்டளை என்று பொய் புகன்றனை, அதனால் நான் கட்டளையிடும் வரை பழநிப் பதிக்கு நீ வரலாகாது" எனப் பல்லைக் கடித்து சுட்டு விரலை நீட்டிச் சீறும் காட்சியைக் கண்டார். கண்ணீர் பெருக சுவாமிகள் உள்ளத்தில் "என்னப்பனே ஆன்மலாபம் கருதி அடியேன் செய்த இச்சிறு தவறை மன்னிக்கலாகாதா" என வேண்ட செவ்வேட் பரமன் "அந்த லாபம் என்னாலாகாதா?" என்று திருவாய் மலர்ந்ததையும் சுவாமிகள் கேட்டு "அப்படியே ஆகட்டும்" என அக்காட்சி மறைந்தது.

சுவாமிகள் வரலாற்றில் இந்நிகழ்ச்சி உணர்த்தும் உண்மைகள் பல இறைவன் ஒருவன் உளன் என்பதும் எங்கும் இருந்து எல்லாவற்றையும் அறிவாள் என்பதையும் ஆன்மலாபம் அவனருளாற் பெற வேண்டுமே ஒழிய நாம் வலிந்து முயலல் தவறு என்பதும் எந்நிலையிலும் பொய்யுரைத்தல் பாவம் என்பதும் உணர்த்தப்படுகின்றன. சுவாமிகள் இந்நிகழ்ச்சியைத் தம் பாடல்களில் எல்லாம் பதிவு செய்திருக்கின்றார்கள். சுவாமிகள் முதல் மண்டலமாகிய குமரகுருதாச சுவாமிகள் பாடலில் 57 ஆக வருவது "திருவுயர்ந்த வாறெழுத்தன்னுவல்" ஈற்றுப்பாடல்

செந்தமிழைச் செவிமடுத்து மகிழுந் தேவைத்
திறலிடும்பன் உயிர்முருக்கி எழுப்புந் தேவைப்
புந்தி நிறைவுடையரு ணகிரி சூழ் தேவைப்
புகரிகந்த கரவருடங் கடகமாதம்
வந்தவொரு புகரிரவிற் பழநிக் கோவில்
வரஇஞ்ஞான் றருளவில்லை யருள்வே மந்நாள்
பந்தமற வருதியெனப் பணித்துப் போந்த
பண்ணவனைப் படர்பவரெம் பரமர் தாமே.

என வருதல் காண்க. முருகன் இசைவு இறுதிவரை கிட்டாத கரணியத்தால் சுவாமிகள் பழநி செல்லவில்லை.
தலயாத்திரை குமரகோட்டம் காணல்




"கால் களாற் பயினென்" என்ற அப்பர் திருவாக்கிற்கேற்பவும். "பெரிய கர்த்தர் வாசஸ்தலத்தைக் கருதி வழி நடவாத காலலின்னகால்" என்று பாடியுள்ளமையாலும் சுவாமிகள் எப்பொழுதும் தலயாத்திரையை மேற்கொண்டார்கள். திருவாலவாய், காளத்தி, திருத்தணிகை, திருவண்ணாமலை என்றும் தலங்களைத் தரிசித்துக் கொண்டு கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகர் நண்ணினார்கள். பத்துத்திங்களுக்கு மேல் தங்கி தலவழிபாடு புரிந்தமையால் கையிருப்பு கரைய ஊர் செல்ல எண்ணி சத்திரத்தை கடந்தார்கள். தலையில் வெள்ளை முண்டாசு வெள்ளாடை அங்கி அணிந்த அழகிய இளைஞன் சுவாமிகள் முன் தோன்றி "நீர் எவ்வூர்?" என்று வினவ சுவாமிகள் "தென் தேசம்" என அவர் "வந்த காரியாம் யாது?" என இவர் "தெய்வ தரிசனம்" என அவர் "குமர கோட்டம் கண்ணுற்றாயோ?" என இவர் விழிக்க அவர் "நான் வழி காட்டுகிறேன். என் பின்னே வருக" என இவர் அவரை பின் தொடர அவர் கோயிலைக் காட்டி "இதோ கொடி மரம்" என்று கூறி திருவுருக் கரந்தார். சுவாமிகள் முருகனின் கருணையை எண்ணி எண்ணித் தொழுது அழுது வழிபட்டார்கள். இந்நிகழ்ச்சி ஸ்ரீமத் குமார சுவாமியத்து வருகை விழைந்திரங்கலில்,

"பிமர மீட்டஞ் செய் காஞ்சியினான் சிலநாள்
பெரிய கோயில்கள் கண்டுபு றப்படுஞான்று
அமல மூர்த்தங்கொள் ஆசுடை வீக்கிய செவ்
வழக னாய் என்முன்வந்து" நும்காரியமென்?
குமர கோட்டம் கண்ணுற்றதின் றிங்கெனவே
குயின்று காட்டி மறைந்த தயாநிதியே!
தமசில் வேற்செங்கையா நினையேகருதித்
தடவுகின்ற தென் நெஞ்சை வலக்கரமே"

என ஆசிரியர் பாடியருளியிருத்தல் காண்க.
கார்த்திகை சுவாமிகளோடு சந்திப்பு




"கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்பதற்கேற்பவும் "ஙகரம் போல்வார் புகரில் குரவர்" எனும் ஞான வாக்கியத்திற்கேற்பவும் சுவாமிகள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. திருவுத்தர கோசமங் கையில் கார்த்திகைச் சுவாமிகள் எனும் முருக பக்தர் இருக்கிறார் என்பதை அறிந்த சுவாமிகள் அவரைக் காண அவ்வூர் சென்ற பொழுது அவர் மதுரை போந்தனர் என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் இல்லம் திருப்பினார். பின்னர் சில நாள் கழித்து நாகப்பட்டினம் கடற்கரையில் சுவாமிகள் உலாவிக் கொண்டிருந்த பொழுது காஷாயமணிந்த துறவியொருவர் வரக் கண்டு அவர் "கார்த்திகை சுவாமிகள் தானா" என்று இவர் ஐயப்பட்டு நோக்கியவுடன் அவர் இவரை நோக்கி "தாங்கள் யார்?" என இவர் "பாம்பன் சுவாமிகள்" என அவர் தன்னைக் கார்த்திகை சுவாமிகள் என அறிமுகப்படுத்திக் கொள்ள இருவரும் கழிபேருவகையுற்று கட்டித்தழுவி "நினைத்தது நடந்தது நிமலன் அருளால்" என உள்ளங்குளிர்ந்து உரையாடி நின்றனர். சுவாமிகள் முருகனருள் பெற்ற கார்த்திகை சுவாமிகளின் வரலாற்றைப் "பெருவேண்டுகோள்" எனும் பதிகத்தில் பதிவு செய்தார்கள்.

திங்கட் சடையின் மங்களைத் திகழும் சிவகோச
மங்கைக் குமரேசர் தொழுதான் வைகிடனெய்தி
அங்கைக் கிடுவால் வல்சிய யின்றோதி மறைந்த
மங்குற் பகைமணியே எனை மறவேல் எனை மறவேல்.
பிறப்பையறுக்கும் பிரப்பன் வலசையில்




"தேடார்ச்சில்வை வாடாத் தெய்வம்" என அருளிய குருநாதர் அதற்குரிய இடமாக வெள்ளலைகள் வீசு கடல் ஓரம் அமைதியான மணற் சூழ்ந்த நெய்தல் நிலச் சிற்றூரான "பிரப்பன் வலசையைத் தேர்ந்தெடுத்தார்" - சுவாமிகள் ஆணைப்படி மயான வெளியில் ஒரு கொட்டகை நிருமிக்கப்பட்டு அதன் நடுவே மனிதர் இருக்கத்தக்க சதுரக் குழியொன்று வெட்டப்பட்டு முள்வேலி நாற்புரமும் நாட்டப்பட்டு மேற்புறத்தில் கதவும் இடப்பட்டன. சுவாமிகள் அக்குழியில் அமர்ந்து முப்பத்தைந்து நாள் தவம் புரிந்தார்கள் ஒருவேளை உணவுமட்டும் உட்கொண்டு. ஒருபகலில் பாம்பு உள் நுழைந்தது. சுவாமிகள் அஞ்சவில்லை. ஐந்திரவுகள் ஆணும் பெண்ணுமான பேய்கள் இவரை சூழ்ந்து கொண்டன. ஒரு முனியொன்று இவரை தூக்கிட இவர் யோகதண்டத்தால் அதை அடித்தும் பயன் படாமையால் திருவாறெழுத்தை உச்சரித்தார். அதன்பின் அஃதகன்றது. இவ்வாறு 6 நாள்கள் அகன்ற பின் 7ஆம் நள்ளிரவில் ஜடாமகுடமணிந்த இரு துறவிகள் நடுவே முருகன் இளைஞனாக சுவாமிகள் முன்னே தோன்றி நின்று கொண்டிருக்கும்பொழுது அவ்விருவரும் "கல்வியறிவில் மேம்பட்ட இவர் உமைக் காணவே தவம் இருக்கிறாரென அவ்விளைஞர் இவர் முகம் நோக்கி" ஓர் ரகசியமான சொல்லை கூறிவிட்டு மேற்கில் மறைந்தார். அத்திசையில் ஆசிரியர் கரங்குவித்து அச்சொல்லே உபதேச மொழியென உணர்ந்து யோகநிட்டையில் அமர்ந்தனர். முப்பத்தைந்தாம் நாளிரவு இவர் தலைக்குமேல் பேரிடியோசை வெளிப்பட விண்ணும் மண்ணும் நடுங்கியது. "ஏகாதச உருத்திரர்கள் வருகின்றனர். நீ எழுந்து விட வேண்டும்" என அசரீரீ ஆணையிட்டது. "சுவாமிகள் அஞ்சாது முருகன் மொழிக்கே எழுவேன்" என "அவன் கட்டளையே எழுமின்!" எனும் ஒலி மீண்டும் ஒலிக்க இவரெழுந்து வெளியே வந்து சேர அனைவரும் சுவாமியை வணங்கித் தரிசித்து விபூதிபெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இத்தவத்தின் போது முருகன் நேரில் உபதேசித்த ஒரு மொழியே "தகராலயரகசியம்" எனும் சாத்திர நூலாய் ஆன்மாக்கள் நேத்திரம் திறக்கத் தோன்றியது. சுவாமிகள் எத்தனையோ தலம் சென்றும் ஒடுங்கா என் உள்ளம் பிரப்பன் வலசையில் ஒடுங்கியதால் அடியார் பிறப்பறுக்கும் இவ்வூர் என அலல்கல் சூட்டி மகிழ்ந்தார்கள்.

உள்ளபடி உன்னுபவர் உள்ளபடி உய்யவென உன்னு பெரிய
வள்ளல் முருகையா நடுநிற்கு நிலையைச் சொலிமறைந்த இடமும்
வெள்ளைகினர் புன்துயிலெடுப்பு கடல் வெள்ளலைகள் வீசு வளமும்
உள்ள வொர் பிரப்பன் வலசைப்பதியிதே உலகை உந்து மனமே.




ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு -1 Empty Re: பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு -1

Post by ந.கார்த்தி Fri Feb 17, 2012 6:55 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum