இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சித்திரையில் தொடங்கும் புது வருடம்-ஜெயஸ்ரீ சாரநாதன்

Go down

சித்திரையில் தொடங்கும் புது வருடம்-ஜெயஸ்ரீ சாரநாதன் Empty சித்திரையில் தொடங்கும் புது வருடம்-ஜெயஸ்ரீ சாரநாதன்

Post by ஆனந்தபைரவர் Sat Nov 27, 2010 4:15 pm

தமிழர் தம் மரபைத் திரித்த விநோதங்களுள் ஒன்று, வருடப் பிறப்பை சித்திரையிலிருந்து, தை மாதத்திற்கு மாற்றியது.

தொல்குடி என்றும், செம்மொழி என்றும் நம் பழமையைப் பற்றி நாம் பேசும் அளவுக்கு அந்தப் பழமையின் மீதும், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களின் மீதும் நமக்கே மரியாதையும், நம்பிக்கையும் இருக்கவில்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு சான்றுதான், தையில் வருடப் பிறப்பு என்று பிரகடனம் செய்தது.

நம்முடையது மூத்தகுடி. அது எப்படிப்பட்டது என்பதை, “வழங்குவதுள் வீழ்ந்தக் கண்..” என்னும் ‘குடிமை‘ அதிகாரக் குறளுக்கு உரையாகப் பரிமேலழகர் கூறிகிறார். “தொன்றுதொட்டு வருதல் சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக்காலம் தொடங்கி மேம்பட்டு வருதல்” என்று சேர சோழ பாண்டியர் உள்ளிட்ட தமிழ்க்குடி என்பது படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வரும் குடிப் பெருமை உடையது என்று தெளிவுறுத்துகிறார். குடிமை என்பது, தம் மரபு விடாது, வழி வழியாக என்றென்றும் கடைபிடித்து வருதல் என்று பொருள். ஒரு செயல் வழக்கத்தில் உள்ளதென்றால் - அதிலும் அது என்று துவக்கப்பட்டது என்று அறியாத பழமை கொண்டதென்றால், அதை நம் முன்னோர் ஆய்ந்து, தெளிந்துதான் கடைபிடித்திருப்பர் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.

கற்றதனால் ஆய பயன் என்னவென்றால், இறைவனின் நற்றாள் தொழுதல் என்னும் அடிப்படை வழக்கத்தைக்கூடக் கடைபிடிக்காதவர்கள், தமிழ்க் குடியின் வாழக்கை முறையை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்க முடியும்? ‘அபிதான சிந்தாமணி’ அளவில்தான் புரிந்து கொண்டிருக்க முடியும் என்று நாம் சொல்லலாம்.

அபிதான சிந்தாமணியும் , நாரதரும்.

தமிழ்ப் புத்தாண்டைச் சித்திரையில் ஆரம்பிக்கக் கூடாது என்ற வாதத்தை வைப்பவர்கள், அதற்குக் காட்டும் காரணம் அபிதான சிந்தாமணி என்னும் நூலில் உள்ள, பிரபவ முதலான வருடங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்தான்.

‘அறுபதினாயிரம் கன்னிகையரோடு நீர் இருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’ என்று கேட்ட நாரதரைக் கன்னியாக்கி, அவரிடம் கிருஷ்ணன் பெற்ற அறுபது குழந்தைகள்தான் பிரபவ முதலிய அறுபது ஆண்டுகள் - இப்படிப்பட்ட ஆபாசக் கருத்து கொண்ட வழக்கம் நமக்குத் தேவையா என்றும், இது ஆரியத் திணிப்பு என்றும் இவர்கள் மேற்கோளிடும் அபிதான சிந்தாமணி, ஒரு இந்து மதப் புத்தகம் அல்ல. அறுபது வருடக் கணக்கைக் காட்டும் சோதிடப் புத்தகமும் அல்ல, அல்லது புராணப் புத்தகமும் அல்ல. அது ஹேமச்சந்திர சூரி என்னும் சமணரால் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நிகண்டு வகையிலான அகராதி.

ஒரு அகராதி அல்லது நிகண்டு என்பது, பதப் பொருளைத் தருவது. சிறப்புப் பொருள் ஏதேனும் இருந்தால், அதன் மூலத்திலிருந்தும், மூலத்தை மேற்கோளிட்டும் தருவது மரபு. அறுபது வருடப் பெயர்கள், தொகுதி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக நிகண்டு ஆசிரியர்கள் பெயர், பொருள் போன்றவை மட்டுமே தருவர். மேற்சொன்ன விளக்கங்கள் போன்றவை, உரை ஆசிரியர்களால் பின்னாளில் எழுதப்படுவது.

மேற்கூறிய விளக்கத்தை, நிகண்டு ஆசிரியரோ அல்லது உரை ஆசிரியரோ யார் கொடுத்திருந்தாலும், இந்து மதத்தைத் தாம் புரிந்து கொண்ட வகையில், தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுத்துள்ளனர். அவர் புரிந்துகொணடது வேறுவிதமாக என்றால், இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு அத்தகைய புத்தகங்கள் தானே வேதவாக்காக இருக்க முடியும்? நேர்ப்பார்வை பார்ப்பவர்களுக்குத்தான், ஒரு கோணலை கோணல் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் கோணலையே பார்ப்பவர்களுக்கு, கோணல்தான் நேரான ஒன்றாகத் தெரியும். இந்தக் கட்டுரையை மேலே தொடர்வதற்கு முன்னால், இவர்கள் கண்ட கோணல் என்ன என்று பார்ப்போம்.எங்கு பார்த்தாலும், எல்லா கோபியரும், கண்ணனுடன் இருப்பதாகப் பார்க்கின்றார் நாரதர். நாரதர் போன்ற மூவுலக சஞ்சாரிகளுக்கு, மக்கள் மனதில் ஓடுவது என்ன என்று புரியும். அதனால் அவருக்கு அப்படித் தெரிகிறது.

நம்மையே எடுத்துக்கொண்டால், நம்மில் கோடிக்கணக்கானவர் கண்ணனைத் தொழுபவர்களாக இருப்போம். கண்ணனைத் தொழும் ஒவ்வொருவருக்கும் கண்ணன் பிரத்யேகக் கடவுள். (மற்ற தெய்வங்களும் அப்படியே). ஒரு கோடி மக்கள் கண்ணனை நினைத்தால், கண்ணனும் ஒரு கோடி உரு எடுத்து, ஒவ்வொருவரோடும் தனித் தனியே உறவாடுகிறான் என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொருவரும் தம் அழுகை, தம் சிரிப்பு, தம் கவலை, தம் பெருமை என்று எல்லா உணர்வுகளையும் உள்ளத்தில் உறவாடும் கண்ணனுடன் பகிர்ந்து கொள்வர். இதில் நாம் கொள்ளும் பாவனை , பெண் என்னும் பாவனை. பிறந்த எல்லா உயிருமே பெண் பாவனையுடன் தான் அவனை அணுகுகின்றன. அறிவியல் கோணத்திலும், கரு உண்டாவது பெண் பாவனையில்தான், கருவுற்ற மூன்றாம் மாதம் தான் பால் மாறுபாடு உண்டாகிறது. அவனைவிட்டால் நமக்கு வேறு வழியில்லை என்று அணுகுகிற போது இந்த பாவனை உண்டாகிறது. இதையே நாரதருக்கும் காட்டி, ஒரு வாழ்நாள் சுற்று என்பது அறுபது வருடங்கள் என்று, பிரபவ முதலான அறுபது வருடங்கள், நாரதர் கண்ணனுடன் கூடி இருந்தார் என்று கூறும் தத்துவக் கதை இது. இதை ஹேமச்சந்திர சூரி (அல்லது உரை ஆசிரியர்) புரிந்து கொண்டது ஒருவிதம் என்றால், காலத்தின் கோலமாக, இதை ஓரினச் சேர்க்கையாகப் பார்ப்பது பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி போலும்!இந்தக் கதையின் மூலம், பிரம்ம வைவர்த்த புராணத்தில் வருகிறது. அதில், இந்த உலகில் மாயையைக் கடந்தவர் யாருமில்லை என்று படைப்புக் கடவுள் பிரம்மா கூறுகிறார். இதை நாரதர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘தான் விஷ்ணுவின் பக்தனானதால், தன்னை விஷ்ணு மாயா தீண்டாது’ என்று நாரதர் சாதிக்கிறார். அப்படி எண்ணி அவர் பூவுலகில் சஞ்சரிக்கையில், சர்பபுரி என்னும் இடத்தில் உள்ள குளத்தில் குளித்தவுடன், அவர் மாயையில் ஆட்படுகிறார். பெண்ணாக மாறி விடுகிறார். அவரைக் கண்டு மோகித்த அரசகுமாரனை மணம்புரிந்து கொள்கிறார். அவர்களுக்கு பிரபவ முதலான அறுபது குழந்தைகள் பிறக்கின்றன. அவ்வமயம், ஒரு போர் வந்து அப்போரில், அரசகுமாரனும், அந்த அறுபது குழந்தைகளும் இறந்து விடுகின்றனர். அதனால் சோகம் உற்ற நாரதர், விஷ்ணுவை வேண்டுகிறார். விஷ்ணுவும் காட்சி தந்து, மீண்டும் ஒரு குளத்தில் முழுகி எழச் சொல்கிறார். நாரதர் அப்படி எழுந்தவுடன், பழையபடியே நாரதராக மாறி, தான் அத்தனை வருடங்களும் மாயையில் இருந்ததை உணர்கிறார்.

இது நடந்த இடம் காகிநாடா அருகில் உள்ள சர்பபுரம் என்னும் க்ஷேத்ரம். இங்கு நாரத குண்டம், முக்தி குண்டம் என்னும் இரு குளங்கள் உள்ளன. இங்கு எழுந்தருளியிருக்கும் கடவுள் பெயர் “பாவநாராயணன்’ என்பது. வாழ்க்கை ஒரு பாவனை என்று காட்டுபவர் இவர். இந்த பாவனையை உண்மை என்று எண்ணி நாம் அதில் ஒன்றி விடுகிறோம். இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம். அறுபது வருடங்கள் என்பது ஒரு சுற்று வாழ்நாள் என்ற வகையில் காலம் முழுவதும் இந்த மாயையில் இருக்கிறோம். இந்தக் கதையில் கவனிக்க வேண்டியது - பிரபவ, விபவ என்று பெயர் சூட்டப்பட்ட அறுபது வருஷக் குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இதில்தான் இந்தக் கதையின் தத்துவமே புதைந்து உள்ளது. அறுபது விதமாக, நல்லதும் தீயதும் நடக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிந்து விடும். இந்த அறுபது வருடங்களும் எதைச் சாதித்தோம், யாது செய்தோம், எதற்காகத்தான் வாழ்ந்தோம் என்பது தெரியாமல் இருக்கிறோம். அதுதான் மாயை. மாயையிலிருந்து விடுபட இறைவனைத் தொழுது வெளிவர வேண்டும்- நாரதரைப் போல என்பதே இதன் கருத்து.

இந்தக் கதையில் நாரதர் ஏன் மாட்டிக் கொண்டார் என்றால், நாரத என்றாலே ‘நாரம் தததி இதி நாரத’ என்று விரியும். ‘உயர்ந்த அறிவைத் தருவதால் இது நாரத என்றாயிற்று’ என்பது இதன் பொருள். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல நாரதர் கதையும் நல்லறிவைத் தரவேண்டும். அந்த எண்ணத்தில், நாரதரைக் கதாநாயகனாக வைத்து நம் முன்னோர்கள் சொன்னது, இப்படித் திரியும் என்று யார் கண்டார்கள்?

ஆண் வருடனும், ஆண் வருடியும்

இந்தக் கதை தொடர்பான மற்றொரு கோணல் விளக்கம், ஒரு ஆண் வருடனும், ஒரு ஆண் வருடியும் சேர்வதால் பிறக்கும் குழந்தையே புது வருடமாகும் என்பது. அதனால் இது தமிழ் வருடப் பிறப்பு ஆகாது என்று சொல்லும் இவர்கள், யார் இந்த வருடன், யார் இந்த வருடி என்று தெரிந்து சொல்கிறார்களா?

வர்ஷா என்னும் வடசொல்லிலிருந்து மருவியது வருடம் என்று கூறலாம். வர்ஷா என்றால் ‘பொழிதல்‘ என்பது பொருள். அதன்படி இந்த வருடன், வருடி என்பவர்களெல்லாம் யார் என்றால், பொழிதல் என்னும் வினைப் பெயருக்கு உருவம் கொடுத்து உருவகப் படுத்தி சொல்லப்படுகிற கதை என்றாகிறது. அது குழந்தைகளுக்கும் புரியவேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகின்ற கதை. குழந்தைகள் நம்பினார்களோ இல்லையோ, இவர்கள் நம்பி விட்டார்கள்; குழந்தை மனம் படைத்தவர்கள் போலிருக்கிறது!!

தீர ஆராய்ந்தால், வருடம் என்னும் பெயருக்கு வேறு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. வருடை என்னும் சொல், வருடம் என்று மருவியிருக்க வேண்டும்.

வருடை என்பது மேட ராசியின் பெயர். பாவை நோன்பை விளக்கும் பரிபாடல் 11-ஆம் பாடலில் வானத்தில் கோள்கள் இருக்கும் நிலையை விவரிக்கையில், ‘வருடையைப் படி மகன் வைப்ப’ என்று வருகிறது. செவ்வாய் கிரகம், வருடை என்னும் மேட ராசியை அடைந்தது என்று பொருள்.வருடை என்பது ஒரு ஆடு. அது மலையாடு. மலைப்பகுதிகளில் மட்டுமே வசிக்கக் கூடியது. வருடையைக் குறிக்கும் ராசி மேட ராசி. அது குறிக்கும் மாதம் சித்திரை மாதம். அம்மாதம் தான் வருடத்தின் முதல் மாதம் என்று காட்டும் வகையில், நெடுநல் வாடையில்,

திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து

என்று ஆட்டினைத் தலையாகக் கொண்டு, சூரியன் இந்த உலகத்தைச் சுற்றி விண்ணில் ஊர்ந்து வருகிறான் என்று கூறப்பட்டுள்ளது.

வருடை என்னும் ஆட்டுக்கு நம் முன்னோர் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதற்கு ‘வான வரம்பன்’ என்று பெயர்பெற்ற, ஆடு கோட்பாட்டுச் சேரலாதனே சாட்சி.

அது என்ன ஆடு- கோட்பாடு? இப்படியும் ஒரு பட்டப் பெயரா? கூவம் கொண்டான், ஒகேனக்கல் கொண்டான், மெரினா கொண்டான் என்றெல்லாம் சொன்னால் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆட்டை வைத்து என்ன இப்படி ஒரு பட்டப் பெயர் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

கோட்படுதல் என்றால், பிடித்தல் அல்லது கட்டுதல் என்று பொருள். ஆட்டைப் பிடித்து வந்தமையால் இந்த அரசனுக்கு இப்படி ஒரு பட்டப் பெயர்.

இந்தச் சேர அரசன் சாதாரணன் அல்லன். பதிற்றுப் பத்தின் ஆறாம் பத்து இவன் மீது பாடப் பட்டவைதான். காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பாடிய ஆறாம் பத்தின் பதிகத்தில், இந்த அரசன், தண்டகாரண்யத்திற்குச் சென்று அங்கிருந்த வருடையைப் பிடித்து, தொண்டி நகருக்குக் கொண்டு வந்தான், அதன் மூலம் வான வரம்பன் என்னும் பெயரும் பெற்றான் என்று சொல்லப்படுகிறது.

“குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்(டு) ஓரூர் ஈத்து
வான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி
ஏனை மழவரைச் செருவின் சுருக்கி
மன்னரை ஓட்டிக்
குழவிகொள் வாரிற் குடிபுறந் தந்து
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்
*ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை*
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்”

தண்டகாரண்யம் என்பது விந்திய மலையின் தெற்குச் சரிவில் உள்ள காடு. (ராமர் வந்ததாக ராமாயணத்திலும் சொல்லப் படும் தண்டகாரண்யம் இதுவே). இந்தச் சேர மன்னன் தண்டகாரண்யம் சென்று வருடையைக் கொணர்ந்து, வான வரம்பன் என்றும், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்றும் பெயர் பெற்றான் என்றால், அவன் வானத்தையே முட்டுவது போன்ற விந்திய மலையை எட்டி, அதனால் வான வரம்பன் என்னும் பெயரையும் பெற்று, அங்கு திரிந்துக் கொண்டிருந்த வரையாடு என்னும், மலையாடு என்னும் வருடையைக் கொணர்ந்து, அதனால் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்னும் பட்டத்தையும் பெற்றுள்ளான் என்பது தெளிவாகிறது.

இமயத்தை எட்டிய இவன் முன்னோன் “இமய வரம்பன்” என்று பெயர் பெற்றான். இவன் சென்றது தண்டகாரண்யம் என்றாலும், அங்கு சென்றதன் காரணமாக “வான வரம்பன்” என்று பெயர் பெற்றான் என்று பதிகம் கூறுவதால், அந்த வனத்தைக் கொண்டுள்ள விந்திய மலைச் சிகரத்தையே எட்டி உள்ளான் என்று தெரிகிறது. அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று ஆராய்ந்தால்- அவன் போரிடச் செல்லவில்லை. மலைச் சிகரங்களில் வாழும், வருடை என்னும் மலையாட்டைப் பிடித்துக் கொண்டு வரவேதான் அங்கு சென்றிருக்கிறான் என்று தெரிகிறது. எந்த அளவு வருடை ஆட்டுக்கு முக்கியத்துவம் இருந்திருந்தால், சேர அரசன், தானே சென்று அதைப் பிடித்து வந்திருப்பான்? அதன் காரணமாக பட்டப் பெயரையும் பெற்றிருப்பான்?

வருடை என்பது மேடத்தைக் குறிப்பதாலும், சூரியப் பயணத்தின் ஆரம்பம் மேடம் ஆதலாலும், ஆரம்பம் என்பது ஒரு உயர்த்த இடமாக இருக்க வேண்டும் என்னும் விழைவை ஒட்டியும் இந்த மலையாட்டினைக் கொணர்ந்துள்ளான் என்று புலனாகிறது. இன்றும் இரவிக்குளம், மூணாறு பகுதியில் காணப்படும், அபூர்வ வகை வரையாடு இந்த வருடையே.

இந்த வருடையைப் பற்றி சிலப்பதிகாரத்திலும் குறிப்பு வருகிறது. கண்ணகியின் கதையை சேரன் செங்குட்டுவன் தெரிந்துகொள்ளும் முன், மலைப்பகுதியில் இயற்கையை ரசித்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுது அவன் “வரையாடு வருடையும்” பார்க்கிறான் என்று சிலம்பு கூறுகிறது. (காட்சிக் காதை) இதன் மூலம் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன், சிலப்பதிகார காலத்திற்கு முன்னமே இருந்தவன் என்று தெரிகிறது. அந்நாளில் வருடைக்கு எத்துணை முக்கியத்துவம் இருந்திருந்தால், அதைக் கொண்டு வந்திருப்பான்?

நம் தமிழ் முன்னோருக்கு, இமயமும், பொதியமும் நினைத்தாலே இனிக்கும் இடங்கள். மூணாறில் காணப்படும் வருடை (Nilgiri Tahr), இமயத்தில் காணப்படும் வருடை (Himalayan Tahr) வகையைச் சேர்ந்தது. இமயத்தில் காணப்படும் வரையாடு பொதியத்திலும் உலவ வேண்டும். சேரன் மலைநாட்டிலும் உலவ வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். இமயத்து வருடை வகை ஆடுகள் அந்நாளில் விந்திய மலையிலும் இருந்திருக்க வேண்டும். அவற்றை விந்தியத்திலிருந்து, சேரமான் கொண்டு வந்திருக்கிறான்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

சித்திரையில் தொடங்கும் புது வருடம்-ஜெயஸ்ரீ சாரநாதன் Empty Re: சித்திரையில் தொடங்கும் புது வருடம்-ஜெயஸ்ரீ சாரநாதன்

Post by ஆனந்தபைரவர் Sat Nov 27, 2010 4:16 pm

சூரியச் சுற்றின் ஆரம்பம் சித்திரை துவங்கும், மேட ராசியில் என்பதாலும், அவ்விராசி வருடை என்னும் மலையாட்டை அடையாளமாகக் கொண்டது என்பதாலும், வருடையில் ஆண்டு துவங்கியிருக்கிறது; வருடையில் துவங்குவதால், அது வருடம் என்று ஆகியிருக்கலாம்.

இதில் வருடன், வருடி என்ற ஜோடி எப்படி வந்தது? இப்படி ஜோடியாக சொல்லப்பட்டு, அந்த ஜோடியிடமிருந்து வருடம் பிறந்தது என்பது ஆபாசம் அல்லவா என்பது நம் குழந்தைக் கதை கேட்பாளர்கள் கொண்ட கவலை.

மேடத்தில் ஜோடி உள்ளது. அதுவும் ஆணும், ஆணும் சேர்ந்த ஜோடி! இந்த ஜோடியை நம் முன்னோர்கள் தம் பாடல்களில் பதிந்துள்ளனர். இந்த ஜோடியைப் பற்றி பரிபாடலில் இரு இடங்களில் காணலாம்.

இந்த அண்டம் முழுவதும், அவனிடத்திலேயே தோன்றி, அவனிடத்திலேயே விரிந்தன என்று திருமால் பெருமையைப் பேசும் 3-ஆம் பாடலில், எவை எல்லாம் தொன்றுதொட்டு அவனால் துவங்கப் பட்டவை என்று பட்டியலிடுகையில், “தாமா இருவரும்” என்று அசுவினி குமாரர்களைப் பற்றி சொல்லப்படுகிறது. படைப்புக்காலம் தொடங்கி, சில விஷயங்கள் முன்னோடியாக உள்ளன. பிரமன் முதலான தேவர்கள், சூரியன் முதலான கிரகங்கள், அசுவினி தேவர்கள் முதலான விண்மீன்கள், ஐம்பொறிகள், வசுக்கள், ருத்திரர்கள் என்று இந்தப் பட்டியல் செல்கிறது.

செவ்வேள் பற்றிய பரிபாடல் 8 -ஆம் பாடலில், யார் யாரெல்லாம் பரம் குன்றத்தில் இருக்கும் குமரனைக் காண வந்துள்ளனர் என்னும் போதும், அவரவர் வகையில், முதன்மை பெற்றவர்களையே சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில், “மருந்துரை இருவரும்” என்று இரட்டையரான அசுவினி சகோதரர்களைப் பற்றி சொல்லபடுகிறது.

ஞாயிறு தன் பயணத்தை ஆடு - தலையாகத் துவங்குகையில், இரட்டையரான அசுவினி தேவர்களிடமிருந்து தான் துவங்குகிறான். (சோதிடப்படி, சூர்யக் கடவுளுக்கு முக்கியமான க்ஷேத்ரம் ஆடுதுறை என்னும் ஊர் ஆகும், மருத்துவக்குடி என்பதும் இந்த ஊரின் மற்றொரு பெயர் என்பது நினைவு கூறத் தக்கது. ஆடுதுறை மாசாத்தனார் என்னும் சங்கப் புலவரும் இருந்திருக்கிறார். ) மருத்துவர்களான இவர்கள் இருவரை முதலாகக் கொண்டு வருடம் பிறக்கிறது. ஆண் வருடன், ஆண் வருடி என்று இதை (யாரோ) உருவகப்படுத்தியதால், குழந்தைக் கதை கேட்பாளர்கள் அதையே பிடித்துக்கொண்டு விட்டனர்.

இவர்களுக்கு, நம் சங்கப் புலவர்கள், இன்னொரு அதிர்ச்சிக் கதை வைத்திருக்கிறார்கள். அதைக் கேட்டு, சங்கப் பாடல்களுக்கே முழுக்குப் போட்டு விடுவார்களோ நம் கதை விரும்பிகள்?

முன் கூறிய பரிபாடலில், தாமா என்று அசுவினி தேவர்களைக் குறித்துள்ளார்கள். தாமா என்றால் தாவும் குதிரை என்பது பொருள். அசுவினி தேவர்கள் குதிரையின் வயிற்றில் பிறந்தவர்கள். இதற்கு உரை கூறும் பரிமேலழகர், “உருப்பசி குதிரைப்பெட்டையாகியாளைக் கண்டு நயந்து, தானும் அவள்பாற் செல்கின்ற ஆதித்தியனுடைய நாசிகைத் துளைகளால் இரண்டு வீரிய விந்துகள் வீழ, அவர் அங்கே இரட்டைகளாய்த் தோன்றினர்” என்கிறார்.

இதை ஆபாசக் கதை என்பதா அல்லது ஆரியக் கதை என்பதா அல்லது ஆரியத் திணிப்பு என்பதா? ஆனால், சங்கப் புலவர் கடுவனிள வெயினனார் கூற, பரிமேலழகர் விளக்கியுள்ளாரே? இந்தக் கதைகள் எல்லாம் நம் தமிழ் முன்னோரும் ஏற்று, கையாண்டவையாக உள்ளனவே? ஆபாசம் என்றாலோ, அருவருப்பு என்றாலோ, அவர்கள் இவற்றை எழுதியிருப்பர்களா? நாம் சிந்திக்க வேண்டும்.

வேகமாக ஓடும் குதிரை போல சூரியன், இந்தப் பூ மண்டலத்தைச் சுற்றி வருகிறான் (நம் பார்வையில்). ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பயணம் செய்யும் அவன், ஏழு குதிரைகளாக ஏழு வண்ணங்களைத் தன்னகத்தே கொண்டு, ஒரு குதிரையாகவும் செல்கிறான் என்று உருவகப் படுத்தலாம். ஜோடியாகத் தேரை ஓட்டினால், இன்னும் ஜோராக ஓடலாம். அந்த ஜோடியை முதலாகக் கொண்டு, வருடம் முழுவதும் ஓடவே, அந்த வருடம் என்பதே அந்த ஜோடி பெற்ற குழந்தை என்று கதையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது என்றும் தெரிகிறது.

துவக்கம் என்பது அசுவினியிலிருந்துதான் என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

பரிபாடல் 19-இல், முருகன் எழுந்தருளியிருக்கும் திருப்பரம் குன்றத்தில் ஒரு ஓவிய மாடம் இருந்தது என்றும் அங்கே முதலாவதாக இருந்த ஓவியம், சூரியம் வலம் வரும் அசுவினி முதலாவதாகிய நாண்மீன்கள், மற்ற பிற மீன்கள் (நட்சத்திரங்கள்) கொண்ட காலச் சக்கரத்தை விளக்கும் ஓவியமாகும் என்கிறார் நப்பண்ணனார்.

“என்றூழ் உரைவரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும்”

இங்கு சுடர் நேமி என்று ஞாயிறு மண்டலத்தை, சோதிடத்தில் கூறுவது போல, சக்கரம் என்கிறார். அந்தச் சக்கரத்தின் தலை மேடம் என்னும் ஆடு!

அசுவினி முதலான மீன்கள் தொட்டே திங்களும் வலம் வருகிறான். தன் மனைவியர் மற்றும் சுற்றத்தார் புடை சூழ, பாண்டிய மன்னன் பரம் குன்றத்தைச் சுற்றி வருவது, அசுவினி முதலான விண்மீன்கள் புடை சூழ, திங்களானவன் மேரு மலையைச் சுற்றி வருவதற்கு ஒப்பாகும் என்கிறது 19 - ஆம் பரிபாடல். “சுடரோடு சூழ் வரு தாரகை மேருப் புடை வரு சூழல்”

சூரியன் கதையில், ‘தாமா’வான அசுவினி, சந்திரன் கதையில், 27 மனைவிகளுள் முதன்மையான அசுவினி என்னும் பெண்ணாகி விடுகிறான்! ஆரியத் திணிப்பு, ஆபாசம் என்றெல்லாம் பெயர் சூட்டப்படும் இந்தக் கதைகளுக்குப் பின்னால் அறிவியல் உள்ளது என்று பகுத்தறிவுவாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அறிவியலை நம் முன்னோரும் தெரிந்து கொண்டுள்ளனர்.

ஞாயிறும், திங்களும், வானத்தைப் புணர்ந்தன - என்பது போன்ற சொற்றொடர்களை சங்கத் தமிழில் காணலாம். “வியல் விசும்பு விரிகதிர் மதியமொடு புணர்ப்ப” என்று ஆரம்பிக்கும் பரிபாடல் 11- ஐ விளக்கும் போது, “மேலவாய நாண்மீன்களைக் கீழாய மதி புணர்தலாவது:- அவ்வநேர் நிற்றன் மாத்திரமாகலின், அவற்றை ‘விசும்பு புணர்ப்ப’ என்றார்” என்று பரிமேலழகர் கூறுகிறார்.

திங்களானது தான் மணந்த மனைவியருள், ரோஹிணியிடம் அதிக அன்பு கொண்டிருந்தான் என்று கூறப்படுவதெல்லாம், அதன் சுற்றுப் பாதையிலேயே ரோஹிணி நட்சத்திரமும் அமையப் பெற்றதால்தான். வானப் பாதையில், சந்திரன் செல்லும்போது, மற்ற நட்சத்திரங்கள் அந்தப் பாதையிலிருந்து சற்று விலகியே உள்ளன. ரோஹிணி மட்டும்தான் பாதையிலேயே அமைத்துள்ளது. திங்கள் ரோஹிணியைக் கடக்கும் போது, அந்த நட்சத்திரத்துடன் ஓட்டிச் செல்வது போலக் காணப்படுவதால், அதை நினைவூட்டக் கதையாகக் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்.

வருடையும் சித்திரையும்.

இங்கே ஒரு கேள்வி எழலாம். சூரியன் மேடத்திலிருந்து பயணம் தொடங்குவது, 12 ராசிகளைப் பற்றியதாக இருக்கலாம். மேடம் என்பது ராசிகளுள் முதன்மையானது. வருடக் கணக்கு என்பது, சித்திரையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று இது எப்படி காட்டுகிறது? வேறு ஒரு மாதத்திலிருந்து கூட வருடம் ஆரம்பமாகியிருக்கலாமே என்று கேட்கலாம்.

தமிழ் சான்றோர் இந்தச் சந்தேகத்திற்கு இடம் வைக்கவில்லை. சூரிய மாதத்தைக் குறிக்கும் இடங்களிலெல்லாம், மேடம் முதலான ராசிகளின் பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, சோதிடக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ள பழைய நாடிச் சுவடிகளைப் பார்த்தால், சூரிய மாதங்களான சித்திரை போன்றவற்றை, அவற்றின் ராசியின் பெயர் அல்லது பிற தமிழ்ப் பெயர்களால் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, சித்திரை மாதத்தை மேடம், மை, மறி, ஆடு, வருடை, கொறி என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். சூடாமணி நிகண்டிலும் இவற்றைக் காணலாம்.

இரண்டு விதமான மாதக் குறிப்புகளை நாம் பின்பற்றி இருக்கிறோம். ஒன்று சூரிய மாதம், மற்றொன்று சந்திர மாதம். ராசிகளின் பெயரைக் குறித்தே சூரியன் சஞ்சரிக்கும் மாதங்கள் சொல்லப்பட்டன. சந்திரனைக் குறித்தே சித்திரை என்னும் மாதங்கள் சொல்லப்பட்டன.

மாதம் என்னும் சொல்லே, மதி என்னும் சொல்லிலிருந்துதான் உண்டாயிற்று. எந்த நட்சத்திரத்தில் மதி, முழு மதியாகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரில்தான் சந்திர மாதங்கள் சொல்லப்பட்டன. இந்த முறைக்கு சாந்திரமானம் (Lunar Calender) என்று பெயர். இந்தப் பெயர்கள் நாளடைவில் சூரிய மாதங்களுக்கும் சேர்த்து, தற்காலத்தில், சூரியமாதப் பெயர்களாகி விட்டன.

சூடாமணி நிகண்டு தரும் சூத்திரப்படி, இன்றைய தமிழ் மாதப் பெயர்களை பௌர்ணமி வரும் நட்சத்திரங்களைக் கொண்டு அறிய முடிகிறது.

பின்வருவன, பௌர்ணமி காணும் நட்சத்திரங்களின் தமிழ்ப் பெயர்கள். அவையே, அந்த மாதப் பெயர்களாக ஏற்கப்பட்டுள்ளன.

சித்திரை - சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி.
வைகாசி - விசாகத்தின் மற்றொரு பெயர் வைகாசி
ஆனி - மூல நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆனி.
ஆடி - உத்திராட நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆடி..
ஆவணி - அவிட்ட நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆவணி.
புரட்டாசி - பூரட்டாதி நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் புரட்டை
ஐப்பசி - அசுவினி நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஐப்பசி.
கார்த்திகை - கார்த்திகை நட்சத்திரம்
மார்கழி - மிருக சீரிடத்தின் மற்றொரு பெயர் மார்கழி
தை - இது விதிவிலக்கு. தைப்பதால் அது தை. எதைத் தைக்கிறது என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.
மாசி - மகம் நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் மாசி.
பங்குனி - உத்திர நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் பங்குனி.


இந்த இரண்டு வகை மாதங்களையும் பின்பற்றி வந்தது குறித்து, பழம் தமிழ் இலக்கியங்களிலிருந்து இரண்டு எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

சித்திரையில் தொடங்கும் புது வருடம்-ஜெயஸ்ரீ சாரநாதன் Empty Re: சித்திரையில் தொடங்கும் புது வருடம்-ஜெயஸ்ரீ சாரநாதன்

Post by ஆனந்தபைரவர் Sat Nov 27, 2010 4:18 pm

முதலில் சூரிய மாதம் பற்றி ஒரு மேற்கோள்.

மணிமேகலையில், புத்தர் பிறந்த தினத்தைக் குறிக்கும் இரு இடங்களிலும் சூரியன் செல்லும் மாதத்தை இடபம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து
ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனோடு பொருந்தி..” (11 & 15 )

buddha-purnima-moon-thanks-arvind-narvekar‘இளவேனில் பருவத்தில் இடபத்தில் சூரியன் 13 நாட்கள் சென்றபின் மீனத்து இடை நிலையில் திங்களோடு பொருந்தும் போது’ என்று பொருள் தரும் இவ்வரிகளை சோதிடம்மூலம் தான் புரிந்து கொள்ள முடியும். இளவேனில் என்பது சித்திரை; வைகாசி என்பது, இங்கே வைகாசி என்று சொல்லாமல், இடபம் என்று சாத்தனார் கூறியுள்ளது, அந்நாள் வழக்கப்படியே. இடபம் என்று சொன்ன மாத்திரத்திலேயே, அது சூரியன் இருக்கும் மாதத்தைக் குறிக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

‘இளவேனில் பருவத்தில், சூரியன் இடபத்தில் 13 நாட்கள் சென்ற பின்..’ என்று இப்பகுதி கூறுகிறது. சூரியன் ஒரு நாளுக்கு ஒரு பாகையைக் கடக்கிறான். 13 பாகைகள் கடந்திருந்தால், அன்றைக்கு அந்த மாதம் (அ) ராசிக்கு வந்து 13 நாட்கள் முடிந்து விட்டன என்று அர்த்தம். போதித் தலைவனான புத்த பிரான் வைகாசி விசாகத்தில், அதாவது வைகாசி மாதம் பௌர்ணமியில் பிறந்தார். அவர் பிறந்த அந்த நாளில், சந்திரன் இருக்குமிடம் எளிதாகத் தெரிந்து கொண்டு விடலாம் - விசாகம் என்று. ஆனால் சூரிய மாதத்தில், அன்று எத்தனையாவது நாள் என்று சொல்லும் வகையில் இந்த வரிகள் அமைத்துள்ளன. இடபத்தில் 13 நாட்கள் சென்றபின் என்றால், சூரிய மாதத்தில் 14 -ஆம் நாள் என்று பொருள். இதையே வைகாசி மாதத்தில் 14-ஆம் நாள் என்று சாத்தனார் சொல்லியிருந்தால் குழப்பமாகியிருக்கும். வைகாசி என்பது சந்திர மாதம், அதில் 14-ஆம் நாள் என்றால், அன்று சதுர்த்தசி - பௌர்ணமிக்கு முதல் நாள் என்று அர்த்தம்.

இந்த வரிகள் மூலம், புத்தர் பிறந்த சந்திர மாதம் என்று ஆரம்பித்தது என்று கூறி விடலாம். சூரியன் இடபம் வந்து 13 நாட்கள் ஆகி விட்டன. ஆனால் அன்றோ, பௌர்ணமி, சந்திர மாதத்தில் 15-ஆம் நாள்.எனவே சூரியன் மேடத்தில் 28 -ஆம் பாகையில் இருந்த போது, அமாவாசை வந்திருக்க வேண்டும். மேட மாதத்தின் 29 -ஆம் நாள் வைகாசி (சந்திர மாதக் கணக்கில்) ஆரம்பித்திருக்கும். அப்பொழுதுதான், இடபத்தின், 14-ஆம் நாள் விசாகப் பௌர்ணமி வந்திருக்கும்.

இந்தச் செய்யுளில் இடைநிலை மீன் என்று சொல்லப்படுவது ஒரு முக்கிய வானியல் குறிப்பு ஆகும். விசாக நட்சத்திரம், இடைநிலை மீன் ஆகும். விஷாகா என்றாலே பிரிக்கப்பட்டது அல்லது பிளவு பட்டது என்று பொருள். சோதிடத்தில் இதற்கு ஒரு விளக்கம் உண்டு. கிருஷ்ணாவதாரம் நடந்த போது, equinox என்று சொல்லப்படும் சம நோக்கு நாள் கார்த்திகையிலும் விசாகத்திலும் அமைந்தன. அதற்குமுன் வரை விசாகம் ராதா என்று அழைக்கப்பட்டது. ராதாவை அடுத்து வந்த அனுஷம், எனவே அது அநு-ராதா என்று அழைக்கப்பட்டது. சம நோக்கு நாள், ராதாவை வடக்கு, தெற்கு என்று பிளந்ததால், அது முதல் விசாகம் என்று அழைக்கப்படலாயிற்று என்பது சோதிடக் கருத்து. இக்கருத்து, இடைநிலை மீனம் என்று விசாகத்தைக் குறித்து வரவே, பண்டைத் தமிழர் கொண்டிருந்த வானியல் அறிவு தெரிகிறது. அவர்கள் கடைபிடித்த வருடப் பிறப்பும் அப்பழுக்கில்லாத சரியான நிலைப்பாடாகத்தான் இருக்க வேண்டும் என்றும் நிரூபணமாகிறது.

இப்பொழுது சந்திர மாதத்தைக் காட்டும் உதாரணத்தைப் பார்ப்போம். புறம், 229 - ஆம் பாடல் முழுவதுமே அரிய சோதிடக் கருத்துகளைக் கொண்டுள்ளது. “ஆடிய லழர் குட்டத்து” எனத் தொடங்கும் இப்பாடல் பாடப்பட்டது பங்குனி மாதத்தில். பங்குனி பிறந்து அன்றைய தினம் சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கிறான். அன்று நள்ளிரவில், பங்குனிக்கு உச்சமாகிய உத்தர நட்சத்திரம், தலை மேல் இருக்கிறது. அங்கிருந்து உத்தரம் சாய ஆரம்பித்தவுடன், ஒரு எரி நட்சத்திரம் வடக்கிலும் இல்லாமல் கிழக்கிலும் இல்லாமல் வீழ்த்தது. அதைக் கண்ட புலவர் கூடலூர்க் கிழாரும் மற்ற பலரும் நம் அரசனுக்கு என்ன ஆகுமோ என்று அஞ்சினர். அவன் நோய்வாய்ப்படாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டினர். எனினும் அந்த எரி நட்சத்திரம் கண்ட ஏழாம் தினம், அரசன் மறைந்த துக்கச் செய்தி வந்தது என்று போகிறது அப்பாடல்.

டாக்டர் உ.வே.சா. அவர்கள் கண்டெடுத்த உரையில் (யார், எப்பொழுது எழுதினர் என்று தெரியாத பழமை கொண்ட உரை - டாக்டர் . உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த, ‘புறநானூறு மூலமும், உரையும்’ புத்தகத்தில் காணலாம்) “பங்குனி மாதத்தினது முதல் பதினைந்தின் கண் உச்சமாகிய உத்தரம், அவுச்சியினின்றும் சாய” என்று வருகிறது. பங்குனி மாதத்தின் 15 .ஆம் நாள் உச்சமாவது பங்குனி உத்தரம் என்னும் பௌர்ணமி சந்திரன். எனவே இங்கு சொல்லப்படுவது அமாவாசை அடுத்து வரும் பிரதமை முதல் ஆரம்பிக்கும் சந்திர மாதமே.

அதேபோல், இந்திர விழா ஊரெடுத்தக் காதையில், “சித்திரை, சித்திரைத் திங்கள் சேர்ந்தென” என்று கூறுவதும், சந்திர மாதச் சித்திரையில், சித்திரா பௌர்ணமி என்று பொருள் படும். அவ்வாறே அக நானூறு 137 -இல் பங்குனி உத்தரத்தில், திருவரங்கத்தில் நடக்கும் விழா சந்திர மாதம் குறித்து வருவதே. (பங்குனி உத்தர உத்சவம் அரங்கன் கோயிலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது என்று தெரிகிறது.)

சமீபத்திய சில நூறு வருடங்களில் தான் சந்திர மாதப் பெயர்கள், சூரிய மாதங்களுக்கு வந்திருக்க வேண்டும். அது எப்படி என்று ஆராயப் புகுந்தால், பிரபவ முதலான 60 வருடக் கணக்குகள் இந்த மாற்றத்தின் அவசியத்தை உணர்த்தியிருக்கும்.

பிரபவ முதலான 60 வருடங்கள்

சித்திரை வருடப் பிறப்பு எதிர்ப்பாளர்களுக்கு அலர்ஜியான ஒன்று, இந்த 60 வருடக் கணக்கு. இது எப்பொழுது உருவானது அல்லது எழுதப்பட்டது என்று தெரியாது. ஆனால் எல்லாப் பழைய சோதிட நூல்களும் கூறுவது. நாரத சம்ஹிதையிலும் காணப்படுகிறது (அபிதான சிந்தாமணி கூறுவது போல அல்ல). ப்ருஹத் சம்ஹிதையிலும் காணப்படுகிறது. சூரிய சித்தாந்தத்திலும் சொல்லப்படுகிறது. இந்த 60 வருடங்கள், வியாழன் கிரகத்தின் 60 வருட சுழற்சியின் பெயர்கள். இவற்றை சூரிய வருடங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் இன்று வழக்கில் சூரிய வருடங்களுக்குச் சொல்லப்படுகின்றது. இந்த மாற்றத்தைச் செய்தவர்கள் தமிழர்கள்தான் என்பது எனது கருத்து. இடைக் காட்டுச் சித்தர் அளித்துள்ள 60 வருடப் பலன்களும், பிரபவ முதலான 60 வருடங்களைத் தாங்கியுள்ள சூரிய வருடங்களுக்கே. இது எவ்வாறு நடைமுறைக்கு வந்திருக்க முடியும்?

இதற்கு பதிலை தொல்காப்பியர் சிந்தனையிலிருந்து எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

“முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே”

என்கிறார். இதில் பொழுது என்பது, அந்நிலத்தின் தட்ப வெப்பம் சார்ந்தது. இவ்விரண்டின் இயல்பு தெரிந்தோரால்தான் இவற்றைப் பற்றிப் பேச முடியும், இவை குறித்த விதிகளை வகுக்க முடியும். தமிழ் நிலம், அதன் தட்ப வெப்பம் என்பது, பழந்தமிழ் நாட்டில் இருந்தது போல இன்றில்லை. சூரியன் சிம்ம ராசி ஏகினவுடன், பொதியில் முனிவனான அகத்தியன் (Canopus) சூரிய உதயத்திற்குமுன் எழும்போது (Heliacal rising), சைய மலையில் மழை பொழியும், என்கிறது பரிபாடல்- 11. இது மேற்குத் தொடர் மலை. இன்று அம்மலை நம் வசம் இல்லை. அங்கு மழை பெய்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் இல்லை. மூவேந்தர் ஆட்சி அஸ்தமித்த உடனேயே தமிழ் நிலமும் மாறிவிட்டது, மக்கள் வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு இடைக் காட்டு சித்தர் போன்றவர்கள், சூரிய மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, 60 வருடப் பெயர்களையும் சூரிய வருடங்களுக்குக் கொடுத்திருப்பர்.

இந்த வருடங்கள் அலங்காரப் பெயர்கள் அல்ல. அந்தந்த வருடத்தில் நடக்கும், சம்பவங்கள், வானிலை, மழை, உழவு குறித்த விஷயங்களைக் கூறுவன. தமிழ் நாட்டில் நாம் இன்று பின்பற்றி வரும் வருடக் கணக்கு, வட மாநிலங்களிலிருந்து வேறுபட்டது. அதாவது, இங்கே நமக்கு விரோதி வருடம் என்றால், வட இந்தியாவில், சார்வரி வருடம். இந்த மாறுபாட்டை, இடைக் காட்டுச் சித்தர் போன்றவர்களோ, அல்லது சோதிட வல்லுநர்களோதான் - தொல்காப்பியர் கூறினது போல, நிலம், தட்பவெப்பம் ஆகியவற்றின் இயல்பு உணர்ந்தவர்கள்தான் கொண்டு வந்திருக்க வேண்டும்.

60 வருடங்களும், நிலம், தட்பவெப்பம் குறித்து, சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன. இவற்றைக் குறித்தும் வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், வருடப் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று நாம் பின்பற்றும் வருடக் கணக்கு, நம் பகுதியில் உள்ள வெப்பம், பருவ மழை இவற்றைப் பொருத்ததே.

வருடப் பலன்களை அறிந்து கொள்ள, அவற்றின் பெயர்களே போதும். அப்படி என்றால், இப்பெயர்களைத் தமிழ்ப் படுத்தி இருக்கலாமே என்று கேட்கத் தோன்றும். அது எளிதல்ல. பல பெயர்களுக்கும் சரியான மொழிபெயர்ப்பு தமிழில் மட்டுல்ல, பிற மொழிகளிலும் கிடையாது. தமிழ்விரும்பிகள் கோபப்படாமல் இதைப் படிக்க வேண்டும்.

தானம், தவம் இரண்டும் தங்கா வியனுலகம் பற்றிப் பேசின வள்ளுவரே அந்த இரு வட சொற்களை அப்படியே கையாண்டுள்ளார். ஏன்? அவை சொல்லும் கருத்தை அவற்றைப் போல ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சொற்களைத் தமிழில் அப்படியே ஏற்றுள்ளனர்.

உதாரணமாக, 2006 -2007 -இல் வந்த வியய வருடத்தை எடுத்துக் கொள்வோம். இதைச் சரியாக மொழிபெயர்க்க முடியாது. ஓரளவு சொல்ல வேண்டும் என்றால், குறைவு, நஷ்டம், செலவு என்று சொல்லலாம். அந்த வருடப் பலன் மேற்சொன்னவாறு இருக்கும். வியய என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த வருடம் நடந்ததை நினைவுகூற வேண்டும். அந்த வருடம்தான், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாகத் தர ஆரம்பிக்கப் பட்டன. அது நடந்த ‘வியய’ எப்படிப்பட்டது என்றால், ஆக்க பூர்வமான செலவுகளுக்கான அரசுப் பணம் (மக்கள் பணம்) குறைவுதரும் வண்ணம் செலவழிக்கப்பட்டது. அன்று ஆரம்பித்த குறைவு (வியய), புது வழிகளில் இன்று மக்களாட்சித் தத்துவத்தின் ஆணி வேறான வாக்குச் சீட்டின் புனிதத்தையே புதைக்கும் அளவுக்கு இழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று விட்டது.

இவ்வாறு சரியான வார்த்தைகள், பல வருடப் பெயர்களுக்கு இல்லாமையாலும், புரிந்த வார்த்தைகள், மக்களை பயமுறுத்தும் வண்ணம் இருப்பதாலும் - (விரோதி என்னும் இவ்வருடம், எதிரி என்று தெளிவாகப் பொருள் தருவது) - சித்தர் போன்றவர்கள், வழக்கு ஒழிக்காமல் அந்த 60 வருடப் பெயர்களையே சூரிய வருடங்களுக்குச் சூட்டி இருப்பார்கள். பாதி புரிந்தும் புரியாததுமாக வட மொழியிலேயே அப்பெயர்கள் இருப்பது, அல்லலுறும் மக்கள், பலன் தெரிந்துகொண்டு மேலும் புதுக் கவலைகள் கொள்ளாமல் இருப்பதற்கு உதவும்.



ஆவணியில் புது வருடமா?

அந்நாள் தமிழர்கள் ஆவணி மாதத்தில் புது வருடத்தைத் துவங்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உலவுகிறது. இதற்கு அடிப்படை, “மாயோன் மேய காடுறை உலகமும்” என்றும், “காரும் மாலையும் முல்லை” என்றும் ஆவணி மாதத்தில் துவங்கும் கார்ப் பருவத்தையே தொல்காப்பியர் முதலில் கூறியுள்ளார் என்பதே. இயல்பு தெரிந்து இயல்பு உரைக்க வேண்டும் என்று அவர் கூறுவதற்கொப்ப ஆராய்வோம். மக்களின் வாழ்வாதாரமான் மழை வரும் நேரம், மழையின் அளவு, அது தொடரும் காலம் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எவைஎவை முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் கூறியுள்ள பொழுதைப் பார்த்தாலே புரியும்.

குறிஞ்சியில், நடு ராத்திரி குளிரைச் சமாளிக்க வேண்டும். வெதுவெதுப்பாக அந்நேரம் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.
முல்லையில் முக்கிய நேரம், மாடுகள் திரும்பும் மாலை நேரம். அப்பொழுதுதான் முல்லை மக்கள் மிகக் கவனமாக தங்கள் ஆநிரைகளை திரும்பி கொட்டகையில் சேர்ப்பிக்கும் நேரம்.
மருதத்தில், விடியலுக்கு முன்னமே உழவு வேலைகளைத் தொடங்கிவிட வேண்டும், வெயில் ஏறி விட்டால் நிலத்தில் வேலை செய்ய முடியாது.
நெய்தலில், சந்திரன் உதிக்கும் எற்பாடு நேரம் கடலுக்குச் செல்லும் நேரம்.

இப்படி அந்த அந்த நிலங்களின் தன்மைக்கு ஏற்ப, தொழில் குறித்தும், அவரவர் முக்கிய பொழுது அமைகிறது. ஒட்டுமொத்த தமிழ் நிலங்களை நோக்கினால், பருவ நிலை என்பது, மாரிக் காலம் துவங்கி முக்கியத்துவம் பெறுகிறது. மாரிக் காலம் நன்றாக இருந்தால்தான், வரும் வருடம் வளமாக இருக்கும்.

பரிபாடல் 11-இல் கார் காலத்தில் வரும் முதல் மழை, சரியான சமயத்தில்தான் வந்துள்ளதா என்று சொல்லிவிட்டுத்தான், புலவர், அந்த மார்கழி மாதம் பௌர்ணமியில் துவங்கும் பாவை நோன்பு பற்றி விவரிக்கின்றார். பாவை நோன்பு, நல்ல கணவனைப் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, கொண்ட கணவன் தன்னை விட்டுப் பிரியாமல் இருக்கவும், அவனே வரும் பிறவிகளிலும், கணவனாகக் கிடைக்க வேண்டும் என்றும் மகளிர் அனைவரும் செய்வது. இதைச் செய்யும் மார்கழி மாதம், மழையைக் கருத்தரிக்கும் மாதம். இது ஆண்டாண்டு காலமாக முனிவர்களால் சொல்லப்பட்டு, சோதிடர்களால் கணிக்கப்பட்டு மழை வரவை உறுதி செய்யும் நோன்பும்கூட.

மார்கழி விடியலுக்குமுன், காற்று மண்டலத்தில் மக்கள் வெளியில் செல்வதால் உண்டாகும் சலசலப்பும், சில்லிடும் ஆற்று நீரில் குளிப்பதால் ஆற்று நீரில் ஏற்படும் சலனங்களும், மணலில் பாவைகள் செய்து உற்சாகக் கூக்குரலிடும் சிறுமியர் எழுப்பும் சப்தமும், ஆற்றங்கரையில், ஹோமத் தீ வளர்த்து உண்டாக்கும் வெம்மையும், தெய்வம் தொழும் போது எழுப்பும் ஒலி அலைகளும், என்றைக்கெல்லாம் அவ்வாறு செய்யபட்டனவோ, அன்றிலிருந்து, 195 - ஆம் நாள் மழை பெய்வதை உறுதி செய்யும் என்பது சோதிட விதி. இது தவறுவதில்லை.

மார்கழி, திருவாதிரைப் பௌர்ணமியில் ஆரம்பிக்கும் இந்த நோன்பு தொடர்பாக, அன்றிலிருந்து, 6 மாதம் கழித்து, அதே திருவாதிரை நட்சத்திரத்தில், சூரியன் பிரவேசிக்கும் போது உள்ள கிரக நிலைகளைப் பொருத்து, அதன்பின் வரும் கார்ப் பருவத்தில், மழை எந்த அளவு இருக்கும் என்று கணிக்கப்படும். நல்மழை பொழிவதற்காக தங்கள் அக வாழ்க்கைக்குரிய நோன்புகளை, ஒரு பொது நலம் கருதியும் செய்த உயர் மக்கள் கொண்ட நாடு, நம் நாடு.

bajanகாலம் சுழன்றாலும், இந்த மார்கழி குறித்த - மழை வரச் செய்யக் கூடிய - விடியலுக்குமுன் செய்ய வேண்டிய சலசலப்புகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்று நம் குடிப்பெருமை, மதப் பெருமை முதலியவற்றை நாம் அறியாது இருந்தாலும், அவற்றை மறந்தாலும், காலமானது நாம் அறியாமல் நம்மை வழிப்படுத்திக்கொண்டு செல்கிறது. பாவை நோன்பு கலாசாரம் போனாலும், பஜனை பாடும் வழக்கம் வந்து, மார்கழி வைகறையை சலசலப்புக்குள்ளாக்கியது. தற்காலத்தில், ஐயப்ப பக்தர்கள் அந்த உத்தம நன்மையைச் செய்கிறார்கள். விடியலுக்கு முன், அவர்கள் கோவிலுக்குச் செல்லுதலும், பஜனை பாடுதலும், முற்காலத்தில் பாவை நோன்பின் போது சுற்றுப்புற சூழலில் உண்டாக்கப்பட்ட சலசலப்பிற்கு ஒப்பானது. இதனால், அடுத்த கார்ப் பருவம், மழை தரும். இப்படி நம் வாழ்க்கை, நாம் உணராமலேயே, கார் பருவத்தை முன்னிட்டுதான் இயங்குகிறது.

காரின் முக்கியத்துவத்தை முன்னிட்டு, தொல்காப்பியர் அவ்வாறு எழுதியது, வருட ஆரம்பம் என்று எப்படி ஆகும்?



தையில் புது வருடமா?

சங்கத் தமிழ் நூல்களில் ‘தை‘ என்பது திருநாளாகச் சொல்லப்படவில்லை. அது ஒரு விழாவும் அல்ல. மார்கழியும், தையும் மேற் சொன்னாற்போல் பாவை நோன்பு நோற்கும் காலம். ஆவணியில் துவங்கிய மழைக் காலம், (சேர நாடும் சேர்ந்த அன்றைய தமிழகத்தில்) கார்த்திகை மாதம் வரையில் நன்கு பெய்யும். காட்டாற்று வெள்ளமாக நீர் நிலைகள் நிரம்பியும், குழம்பியும் இருக்கும். மார்கழி மாதத்தில் மழை பெய்வது நின்று, ஆற்று நீர் தெளிந்து ஆங்காங்கே குளம்போல் விளங்கும். மார்கழிக்கு எதிர்புறத்தில் உள்ள புனர்பூசம் நட்சத்திரம் குளம் எனப்படும். அதனாலும், மார்கழி மாதத்தைக் குளம் என்பர். (இந்த செய்தியை பரிபாடல் 11 -இல் காணலாம்.)

தை பிறக்கும் போது, தண்ணீர் நன்றாகவே தெளிந்து விடும். இயற்கையையும், நீர் நிலைகளையும் தெய்வமாக நினைத்த அந்நாள் மக்கள், ‘தவத்தை நீராடுதல்’ என்பதை ஒரு தவமாகவே செய்தனர்.

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர்,
அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

தாயும் மகளுமாக பனி நீரில் மூழ்கி எழுந்து, ஆங்கே நதிக்கரையில் ஆதிரையோனுக்குச் செய்யும் ஹோமத்தீயை வலம்வந்து, முன்பிறவியில் செய்த தவப்பயனோ இன்று நாம் இருப்பதும் இந்த வைகையில் குளிப்பதும் என்று வியந்து, கண்ணாடி போலத் தெளிவாகத் தெரியும் நீரே, எம் வேண்டுதல்களையும் விருப்பங்களையும் நீ தைத்துக் கொள்ளும் வண்ணம் தெளிவாக இருக்கிறாய், தை நீரே, நீ தான் எங்கள் வேண்டுதல்களை வாங்கிக்கொள்ளத் தக்கவள் என்று கூறுவர்

“நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்’ என்மாரும்”, என்கிறது பரிபாடல் 11.

month_raasiமார்கழி முடிந்து வரும் தை தெள்ளிய நீர் ஓடும் காலம். அன்ன நடை, அழகு நடையுடன் வரும் ஆற்றுக் கன்னி, மக்கள் எண்ணங்களை தைத்துக் கொள்கிறாள். தை-இ என்னும் சொல் சங்க நூல்களில் பல இடங்களிலும் வருகிறது. தை என்றால், தைத்தல் என்று பொருள். தைத்தல், பின்னுதல், பொருத்துதல், சேர்த்தல் என்னும் பொருளிலேயே வருகிறது. கார் கால நீர் போலன்றி, தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் தம் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. இந்த மாதத்திற்கு நேர் எதிரில் இருக்கும் மாதம், தைக்கப்பட்ட எண்ணங்களைப் பிரதிபலிக்கச் செய்தார் போல கண்ணாடி போல் இருக்கும் “ஆடி” மாதம் என்றாயிற்று.

தையில், நீரில் கண்ட பிம்பம், ஆடியில் - கண்ணாடியில் நேர் முகமாகத் தெரிய வேண்டும். தையில் உள் வாங்கிய வேண்டுதல்கள், ஆடிக்குள் நிகழ்ந்து விட வேண்டும். இதுவே தவம். நீரின் கண் நின்றும் செய்யும் தவம், மற்றும், நெருப்பின் கண் நின்று (ஹோம குண்டம் சுற்றி) செய்யும் தவம், ஆக பாவை நோன்பு முடித்து, “தவத்தை நீராடி” (பரி பாடல் 11), புலனடக்கி, காக்கும் தெய்வமான ஆற்று நீரின் கண், தங்கள் வேண்டுதல்களைக் கொட்டி செய்யப்படுவதே ‘தை- நீராடல்’ ஆகும்.

இதன் ஆரம்பம் தை மாத முதல் தினமல்ல. மார்கழி பௌர்ணமியிலேயே ஆரம்பித்து விடுகிறது. இத்தகைய பின்புலம் கொண்ட தை மாதம் எங்ஙனம் வருடப் பிறப்பாகும்?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லியுள்ளனரே என்பார்கள். யாருக்கு வழி பிறக்கும்? திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கு. அப்படிக் காத்திருக்கும் கன்னியர் எல்லோருக்குமே திருமணம் ஆகி விடுவதில்லை.

காத்திருக்கும் தலைவனுக்கோ பெண்ணின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை. பாவை ஆடிய இளம் பெண், அவளைப் பார்த்து ஏங்கும் தலைவனைக் காணாள் இல்லை. அவளிடம் மனம் பறிகொடுத்த தலைவன் சொல்கிறான், “நீ தையில் நீராடிய தவம் தலைப் படுவாயோ?” (கலித் தொகை 59)

“இவளோ என்னைப் பார்க்கவே மாட்டேன் என்கிறாள். ஆனால், வருடம் தோறும், தையில் நீராடி, நல்ல கணவன் வேண்டும் என்று மட்டும் வேண்டிக் கொள்கிறாள். என்னைக் காணாது இருக்கையில், தை நீராடி தவம் இருந்து என்ன பயன்?” என்று நக்கல் பேச்சு பேசுகிறான். இப்படியெல்லாம் அக வாழ்கையின் ரசனை ததும்ப ஓடும் கருத்துக்களைக் கொண்டதால் அந்த மாதமே வருடப் பிறப்பு என்று எப்படி சொல்லலாம்?

மேலும் தையை தொடர்ந்து வரும், மாசி மாதம் எப்படிப்பட்டது? ‘மாகூர் திங்கள்’ என்னும் பதிற்றுப் பத்து பாடல் (59), மாக்கள் குளிர் தாங்காமல் உடலைக் குறுக்கிகொள்ளும் மாசி மாதம், மாகூர் மாசியாகும் என்கிறது. அந்தப் பாடலில், பாணன் எப்பொழுதுதான் குளிர் நீங்கி, வெயில் வரும் எனக் காத்திருக்கிறான். பொதுவாக, விடியலுக்கு முன்னாலேயே பாணர்கள் அரசனைக் காணக் கிளம்பி விடுவர். அப்பொழுதான், வெயிலுக்கு முன் அரண்மனை சென்று அடைய முடியும். ஆனால் மாசி மாதத்தில் விடிகாலையில் கிளம்ப முடிவதில்லை. குளிரும் பனியும் அதிகம். மேலும் மாசித் தன்மை உடையதால் அது மாசி என்று உரை காரர் கூறுகிறார். மாசி என்றால் மேகம் என்றும் பொருள். மேகமே இறங்கி வந்தாற்போல், பனி மூட்டம் நிலத்தின் மீது பரவி இருப்பதால் அது மாசி என்றாயிற்று.

நெடு நல் வாடையிலும், (6) ” மாமேயல் மறப்ப, மந்தி கூற” என்று கூறுகிறது. மாசி மாதம், மாடுகள் குளிர் காரணமாக மேயச் செல்லாது மந்தி உடலைக் குறுக்கிக் கொண்டு இருக்கும். “தையும் மாசியும் வையகத்து உறங்கு” என்று பதிற்றுப் பத்து உரைகாரர் கூறுகிறார். வையம் உறங்கும், தைமாதமா வருடப் பிறப்பு என்னும் முக்கியத்துவம் பெற முடியும்?

பொங்கல் திருநாளும், வருடப் பிறப்பும். பொங்கல் திருநாள் தமிழர் திருநாள். அதனால் அன்றே வருடப் பிறப்பு கொண்டாடுவது தக்கது என்று ஒரு வாதம். தமிழர் திருநாள் என்று, தமிழருக்கே உள்ள பிரத்யேகமான பண்டிகை என்று ஒன்று இருக்குமானால் அது கார்த்திகை தீபம் மட்டும்தான். அதைத் தமிழர் தவிர வேறு யாரும் கொண்டாடுவதில்லை. நான் அறிந்த அளவிலேயே, மூன்று இடங்களில் அகநானூறில் கார்த்திகை தீபத்தை எவ்வாறு பழந்தமிழர் கொண்டாடினர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பொங்கல் பண்டிகை பற்றி சொல்லப்படவில்லை.
மக்கள் பொங்கலாடுவர் - எல்லாப் பண்டிகையிலும்.

“பூவும், புகையும், பொங்கலும் சொரிந்து” கடவுளை வணங்கி, இந்திர விழாவில் கொண்டாடினர் என்று சிலம்பு கூறுகிறது. இன்றைக்கும், எந்த விசேஷ நாளிலும் அம்மனுக்குப் பொங்கலிடுவர். தையில் மட்டும் அல்ல, மார்கழியிலேயே பொங்கல் பொங்குதல் ஆரம்பித்து விடுகிறது.

அறுவடையைக் கொண்டாடிப் பொங்கலிடுவர். புது அரிசியைப் பொங்கலிட்டுப் படைத்து விட்டுதான் உண்பர். புது அரிசி உண்பதற்கு நேரம் காலம் பார்த்துதான் சமைத்து உண்ண வேண்டும். இதற்கென்றே சோதிட விதிகள் உண்டு. பொங்கல் பண்டிகை அன்று, நாடு முழுவதுமே மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.ஆனால் பொங்கலாடுதல் என்று ஒரு சொல்லாட்சி தமிழில் உண்டு. “பெய்து புறன் தந்து பொங்கலாடி விண்டுச் சேர்ந்த வெண்மழை போல” என்று 6 -ஆம் பதிற்றுப் பத்தில், 5 -ஆம் பாடலில், காக்கைப் பாடினியார், ஆடு கோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றிச் சொல்கிறார்.

பொங்கலாடுதல் என்றால், நன்கு பெய்து ஓய்ந்த மேகமானது, பஞ்சினைப் போல வெண்மையாக, பரவி, விரிந்து, பொங்கி, வானத்தின் மேலே போய் நிற்கும். அதைப் போல் சேரமானும், நன்கு சிறப்பாக வாழ்ந்து, விரிந்து, உயர்ந்து, பரந்து பொங்கலாடுவது போல் பல்லாண்டுகள் வாழ்கிறான்.
இக்கருத்தை அகம் 217 -இலும் காணலாம்.

pongal-celebrationsநன்கு வாழ்ந்து, மனம் நிறைந்து, மகிழ்ந்து, நல்ல பலன் தந்த மேகம் பஞ்சு போல் பரவிப் பொங்கியதைப் போல இருத்தல் பொங்கலாடுதல் ஆகும். திருப்தியான அறுவடை செய்துகிடைத்த அரிசியைக் களைந்து போட்டபின், வெண்மையாகப் பொங்கும் அந்த உணவும், அதனால் பொங்கல் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். மன நிறைவு ஒரு முக்கிய காரணம் என்பதால், விழாக்களிலும், பண்டிகையிலும், அறுவடை முடிந்த பின்னும், பொங்கலிடுதல் வழக்கமாக இருந்திருக்கின்றது.

கரும்பும் அதே போல் தான். இந்நாளில் தைப் பொங்கல் பொழுதுகளில்தான் கரும்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் சங்க இலக்கியங்களைப் பார்த்தால், கரும்பு வருடம் முழுவதும் விளைந்த பயிர் என்பது புலனாகிறது. கரும்பும், பூவும் இல்லாமல் ஒரு விழாவும் கிடையாது. இது பற்றிய செய்திகள் பதிற்றுப்பத்து, புறநானூறு முதலியவைகளில் உள்ளன.

எனவே பொங்கல் பண்டிகை தமிழர் பண்டிகை என்று சொல்லி வருடப் பிறப்பை அன்று கொண்டாடுவது சரியல்ல.



வானியல் கருத்துக்கள்

வானியல் அடிப்படியில் தான் சொல்கிறோம், சூரியன் வடக்குப் பயணம் துவங்கும் மகர சங்கராந்தி எனப்படும் தை முதல்நாளே வருடப் பிறப்பு என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. சூரியனின் வடக்குப் பயணம், அதற்கு முன்பே தொடங்கி விடுகிறது. 72 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு பாகை என்று சூரியன், precession என்று பின்னோக்கி நகர்கிறான். தற்சமயம், அந்தக் கணக்கின்படி தனுர் ராசி 6-ஆம் பாகையில் வடக்கு நோக்கித் திரும்பி விடுகிறான். அதேபோல் சமநோக்கு நாள் என்பதும் மீன ராசியில் 6-ஆம் பாகையில் ஏற்படுகிறது. நிலையில்லாத இந்தக் கணக்கைக் கொண்டால் என்றென்றும் குழப்பம்தான். ஆனால் வருடம் ஆரம்பித்தல் என்பதில் குழப்பமே கிடையாது. அது சூரியன் மேட ராசியில் நுழையும் நேரம்தான். ஏனென்றால், அதுதான் மக்கள் தொகுதியின் பிறந்த தினம்! சதுர் மகா யுகம் எனப்படும் யுகங்கள் ஆரம்பித்த முதல் நாள்.

இப்பொழுது நடக்கும் சதுர் மகா யுகம் ஆரம்பித்த அன்று, சூரியன் உட்பட அனைத்து கிரகங்களும், மேட ராசியில் 0 பாகையில் நின்றிருந்தன. அதுவே யுகாதி. சூரிய மாதக் கணக்கில், சூரியன் மேடத்தில், அசுவினியில் பிரவேசித்ததை பிறந்த நாளாகக் கொள்கிறோம். ஆந்திரா போன்ற மற்ற இடங்களில் உள்ளவர்கள், சந்திர மாதக் கணக்கைப் பின்பற்றி, சந்திரன், சூரியனோடு சேர்ந்த அமாவாசையின் அடுத்த நாளை யுகாதி என்று கணக்கிட்டு வருடப் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். சதுர் யுகத்தின் முதல் யுகமான கிருத யுகம் ஆரம்பித்தபோது, சந்திரனும் சூரியனுடன் கூடிய அமாவாசையாக இருந்திருக்க வேண்டும் - ஏனெனில், எல்லா கிரகங்களுமே. பூஜ்யம் பாகையில் இருந்தன என்பது சோதிடக் கணக்கு. அதன் பிறகு எல்லா கிரகங்களும் வேறு வேறு வேகத்தில் பயணம் ஆரம்பித்தவுடன், சந்திரனும் சூரியனும் சேரும் அமாவாசையும், மேடத்தின் பூஜ்யம் பாகையில் அமைவதும் எப்போழுதோதான். அதனால் தெலுங்கர்கள் கொண்டாடும் யுகாதி தினம் வேறுபடுகிறது. சூரியமாதம் பின்பற்றும் நாம், சூரியன் மேடத்தில் நிழைவதைத்தான் கணக்கில் கொள்கிறோம். இதுவே மிகச் சரியான கணக்கும் கூட.

சூரியக் கணக்கின் படி மேடத்தில் நுழையும் நேரம் ‘ஜக லக்னம்’ எனப்படும். உலகத்தின் லக்னம் என்று பொருள். நாடு, உழவு, பருவ நிலை, மக்கள், ஆட்சியாளர் குறித்த சம்பவங்கள் இந்த ஜக லக்னத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றன. அதனால்தான் வருடப் பிறப்பு என்பது, பஞ்சாங்கம் வாசிப்பதுடன் வருகிறது. வரும் வருடம் எப்படி இருக்கும், மழை, விளைச்சல் இருக்குமா என்பது போன்ற பெரிய அளவில், நாட்டை பாதிக்ககூடிய விஷயங்களை அறிந்துகொண்டு, அதன் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அரசன் (ஆட்சியாளர்) முடிவெடுக்க வருடப் பிறப்பு உதவுகிறது.

இந்த விதத்தில் பார்த்தால் வருடப் பிறப்பும் வருமுன் காப்போம் வகையைச் சேர்ந்ததுதான். அதனால் தங்களுக்கு என்ன லாபம் என்று ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை போலிருக்கிறது!! தையில் என்றாலாவது ‘சங்கம’ மித்து விடலாம். சித்திரையில் என்ன இருக்கிறது? யாராவது, ஏதாவது ஐடியா கொடுங்களேன்!

முற்றும்.[justify]
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

சித்திரையில் தொடங்கும் புது வருடம்-ஜெயஸ்ரீ சாரநாதன் Empty Re: சித்திரையில் தொடங்கும் புது வருடம்-ஜெயஸ்ரீ சாரநாதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum