இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சிறைவைக்க முடியாத அதிசய சித்தர்

Go down

சிறைவைக்க முடியாத அதிசய சித்தர் Empty சிறைவைக்க முடியாத அதிசய சித்தர்

Post by ஆனந்தபைரவர் Fri Aug 06, 2010 3:05 pm

வேணு சீனிவாசன்

நெய்யைக் கொட்டினால் பணம் வருமா?

சேஷாத்திரி சுவாமிகள் வரதராஜன், மரகதம் தம்பதிக்கு 1870ஆம் ஆண்டு, ஜனவரித் திங்கள் 22ஆம் தேதி மகனாகத் தோன்றினார். சிறு குழந்தையாக இருக்கும் போதே சில சித்து விளையாடல்களை சேஷாத்திரி சுவாமிகள் நடத்தியிருக்கிறார். சிவற்றைக் காண்போம்.

திருவண்ணாமலையில் சேஷாத்திரி சுவாமிகள் ஒரு நாள் கடைவீதியில் வந்து கொண்டிருந்தார். சிறு வியாபாரிகளும் பெரும் வியாபாரிகளும் அவர் தனது கடைக்குள் நுழைய மாட்டாரா? என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். சுவாமிகளின் கரம் ஒரே ஒரு முறை கடைப்பொருள்களை ஸ்பரிசித்தது விட்டால் போதும், அவ்வளவுதான். அத்தனை பொருள்களும் அன்று மாலைக்குள் விற்றுத் தீர்ந்துவிடும். நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு வியாபாரம் நடந்து பணம் குவிந்து விடும். அதனால் தான் வியாபாரிகள் அவரைக் கடவுளைப் போல எண்ணி எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

சுவாமிகள் லேசுப்பட்டவரல்லர். அவ்வளவு எளிதில் ஏதோ ஒரு கடைக்குள் நுழைந்து விடமாட்டார். நல்ல குணமும், நேர்மையும் கொண்ட வியாபாரிகளின் கடைக்குள் மட்டுமே அவர் விஜயம் செய்வார். அவ்வாறே அன்றும் கடைவீதியின் தொடக்கத்திலிருந்து கடைசி வரையில் அவர் நோட்டம் விட்டவாறே சென்றார்.

என்ன நினைத்துக் கொண்டாரோ ஒரு கடைக்குள் நுழைந்தார். அது முத்தியாலு செட்டியாரின் மளிகைக்கடை. சுவாமிகள் உள்ளே சென்று, ஒரு மூலையில் இருந்த பெரிய நெய் டின்னை எடுத்துத் தூக்கிக் குப்புறக் கவிழ்த்தார். நெய் தெருவில் ஓடியது. மண்ணில் கலந்தது.

செட்டியாரோ சிறிதும் கவலை கொள்ளாமல் புன்னகையோடு சுவாமிகளைப் பார்த்துப் பக்தியோடு கும்பிட்டுக் கொண்டிருந்தார். சுவாமிகள் கடையிலிருந்து வெளியெறிச் சென்றார். மறுநாளே செட்டியாருக்கு வராமல் போக்குக் காட்டிய நீண்ட நாளைய கடன் தொகை கேட்காமலேயே வந்து சேர்ந்தது. சேஷாத்திரி சுவாமிகளின் திருவிளையாடல் தான் வராத கடனை வரவழைத்துக் கொடுத்தது என்பதில் செட்டியாருக்கோ திருவண்ணாமலை வியாபாரிகளுக்கோ சிறிதளவும் சந்தேகமில்லை.

தொட்டதால் துலங்கிய அதிசயம்.
அந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம். சேஷாத்திரிக்கு ஐந்து வயதாக இருக்கும் போது அவருடைய தாயார் மரகதம் தன் பிள்ளையை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவில் வாசலில் ஒருவன் கண்ணன் விக்கிரகங்களை விற்பனைக்கு வைத்திருந்தான். தனக்கு ஒரு பொம்மை வாங்கித்தரும்படி சேஷாத்திரி தம் அன்னையிடம் கேட்டார். கையில் காசில்லாத அன்னை, சேஷாத்திரியின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தார்.

ஆனால் குழந்தை சேஷாத்திரி விடுவதாக இல்லை. அழுது ஆர்ப்பாட்டம் செய்து, அந்தக்கணமே அந்தக் கண்ணன் பொம்மையை வாங்கித்தந்தால் தான் ஆயிற்று என்று பிடிவாதம் செய்தார்.

நிலைமையைப் புரிந்து கொண்ட வியாபாரி, “அம்மா உங்கள் குழந்தை ஆசைப்படுகிறான். ஆதலால் நானே ஒரு பொம்மையை அவனுக்குத் தருகிறேன். அதற்கு நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம்” என்று சொல்லி, சேஷாத்திரியின் கைகளில் ஒரு கண்ணன் பொம்மையை எடுத்துக் கொடுத்தான்.

சேஷாத்திரி அந்தப் பொம்மையை வாங்கிக் கொண்டு கூத்தாடினார். அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

மறுநாள் மரகதம் தன் மகனோடு கோவிலுக்குச் சென்றாள். நேற்று பொம்மையைக் கொடுத்த வியாபாரி, குழந்தையைப் பார்த்ததும் ஓடிவந்தான். மரகதத்திடம் “அம்மா! இவன் சாதாரணக் குழந்தை அல்ல, தெய்விகக் குழந்தை” என்றான் பக்தியோடு. மரகதம் விஷயம் தெரியாமல் விழித்தாள்.

வியாபாரி விளக்கினான். “அம்மா! இங்கே நான் பல நாள்களாக வியாபாரம் செய்து வருகிறேன். பொம்மைகள் விற்கவில்லை. வியாபாரம் இல்லாமல் நான் மிகவும் வருத்தத்துடன் நாள்களை ஓட்டிவந்தேன். நேற்று உங்கள் பிள்ளைக்கு ஒரு பொம்மையைக் கொடுத்தேன். அவன் கரம் பட்ட நேரம் பொன்னான நேரம். என்னிடம் இருந்த எல்லா பொம்மைகளும் நேற்றே விற்றுத் தீர்ந்து விட்டன. இப்படியொரு லாபம் கிடைக்கும் என்று நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. இது சாதாரணக் கை அல்ல அம்மா? தங்கக் கை அம்மா! தங்கக் கை.” என்று உணர்ச்சியால் தழுதழுத்த குரலில் கூறி குழந்தையைக் கும்பிட்டான். இந்தச் செய்தி அடுத்த சில நாள்களில் ஊர் முழுவதும் பரவிட்டது. அது முதல் எல்லாரும் அவரை ‘தங்கக் கை சேஷாத்திரி’ என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

நோய் என்ன செய்யும்? சிறை என்ன செய்யும்?
சுவாமிகள் எப்போதும் ஓர் இடத்தில் நிலையாக நிற்க மாட்டார். அரை மணிக்கு மேல் அவரை யாரும் ஒரே இடத்தில் பார்க்க முடியாது. கால் போன போக்கில் எங்காவது சுற்றிக் கொண்டே இருப்பார். மரத்தின் அடியில் அமர்ந்து ஞானம் அடைந்த புத்தரைப் போல அல்லாமல் நடந்து நடந்தே ஞானமடைந்த அதிசயப் புயல்காற்று அவர்.

கிழிந்து போன ஆடைகளும், குளிக்காத உடலும், அழுக்கடைந்த தலைமுடியும். பார்ப்பதற்கு பைத்தியக் காரனைப் போன்ற தோற்றமும் கொண்டவர் மகான் சேஷாத்திரி சுவாமிகள். இதனால் அவரைப் பற்றித் தெரியாதவர்கள், அவரை விரட்டிவிடுவதும் உண்டு. சில பண்டிதர்களும், படாடோபப் பேர்வழிகளும் ‘இந்தக் கிறுக்கனை சித்தபுருஷன் என்று மூளையில்லாத மக்கள் நம்புகிறார்களே’ என்று கேலி செய்வதும் உண்டு.

1928ஆம் ஆண்டு, திருவண்ணாமலையில் உள்ள மக்களை அம்மை நோய் தாக்கியது. பெரியம்மைநோய் பரவியதில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். நாளுக்கு நாள் அந்த நோய் கட்டுக்கடங்காமல் பெருகி மக்களை பலிவாங்கிக் கொண்டிருந்தது. சேஷாத்திரி சுவாமிகளையும் அம்மை நோய் தாக்கியது. அவர் ஓரிடத்தில் நிலையாக இருக்க மாட்டாரே! நோய் கண்ட சுவாமிகளை ஒரே இடத்தில் இருக்கும்படியாகவும், வெளியே சுற்றக்கூடாது என்றும் சுகாதார இலாகாவினர் எச்சரித்தனர்.

இதற்கெல்லாம் கட்டுப்படுபவரா நம் சுவாமிகள்? அவர் தன் வழக்கப்படியே வெளியே சுற்றித் திரிந்தார். அதனால் நோய் எல்லாருக்கும் பரவும் என்று பயந்த அதிகாரிகள் அவரை இழுத்துச் சென்று வழக்குமன்றத்தில் நிற்க வைத்தனர். நீதிபதி அவரை ஒரு மாதம் சிறையில் வைக்கும்படியாக உத்தரவிட்டார். அதனால் சுதந்தரமாகத் திரிந்த பறவை கூண்டுக் கிளியாகி விட்டது.

மறுநாள் காலையில் தண்டனை வழங்கிய நீதிபதி காரில் திண்டிவனம் அருகே சென்றபோது, சேஷாத்திரி சுவாமிகள் சாலையில் ஒரு புளியமரத்தின் அடியில் நிற்பதைக் கவனித்து ஆச்சரியம் அடைந்தார். தன் உதவியாளரிடம் அது குறித்துப் பேசும் போது, திருவண்ணாமலை நகைக்கடை செட்டியார் இராமசுவாமி என்பவர் அங்கே வந்தார். சுவாமிகளைக் கண்டு வணங்கினார். நீதிபதியிடம் அவர் மகானின் பெருமைகளைக் கூறினார்.

அவற்றை நம்பாத நீதிபதி தன் உதவியாளரை அனுப்பி சிறையில் சேஷாத்திரி இருக்கிறாரா? என்று பார்த்து வரும்படியாகச் சொல்லி அனுப்பி வைத்தார். மகானைக் கண்காணிக்க அவர் அங்கேயே தங்கிவிட்டார்.

“மகான் சேஷாத்திரி சுவாமிகளை யாராலும் சிறையில் அடைக்க முடியாது. அவர் பெருமையை அளவிட முடியாது” என்று செட்டியார் நீதிபதியிடம் எடுத்துக் கூறினார். நீதிபதி அவர் சொல்வதைக் கேட்கவில்லை. எனவே செட்டியார் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் சிறைக்குச் சென்ற உதவியாளர், பூட்டியிருந்த சிறைக்குள்ளே சுவாமிகள் கண்களை மூடியவண்ணம் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அச்சத்தால் வெளிறிப்போன முகத்தோடு மரத்தின் அடிக்கு வந்து நீதிபதியிடம் நடந்ததைச் சொன்னார். அப்போதும் நம்பாத நீதிபதி விரைந்து வந்து சிறைக்குள் பார்த்தார். சுவாமிகள் சிறையில் நின்றிருந்தார்.

மகானின் பெருமையை உணர்ந்த நீதிபதி, அவரை விடுதலை செய்து, தான் செய்த தவறுக்காக மன்னிக்கும்படியாகவும் வேண்டிக்கொண்டார். சுவாமிகள் மௌனமாக சிறையிலிருந்து வெளியேறினார்.

சிறை செய்தால் அறை விழும்
இது போன்ற சித்து விளையாடல் ஒன்றை சற்று வேறுவிதமாக சுவாமிகள் 1928ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவின் போது நிகழ்த்தினார். ஈ மொய்த்த தின்பண்டங்களை விற்றுக் கொண்டிருந்த கடைக்காரனிடம் சுவாமிகள் ‘இதை விற்காதே’ என்று எச்சரித்தார். அவருடைய எச்சரிக்கையை அலட்சியப்படுத்தினான் கடைக்காரன். இரண்டு முறை எச்சரித்த சுவாமிகள் மூன்றாவது முறை கடையில் இருப்பவற்றை எடுத்து வீதியில் கொட்டிவிட்டுச் சென்றார்.

கடைக்காரன் வெளியூரிலிருந்து வியாபாரம் செய்ய வந்தவன். சேஷாத்திரி சுவாமிகளின் பெருமை அறியாத அந்த முரடன் காவல் துறையில் புகார் செய்தான். போளூரிலிருந்து திருவண்ணாமலைக்கு திருவிழா பணிசெய்ய வந்த இன்ஸ்பெக்டர், மகானின் பெருமை அறியாமல் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்.

அடுத்த அரைமணியில் அந்தச் செய்தி ஊர்முழுவதும் பரவி, மக்கள் கொதிப்படைந்து, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சுவாமிகளை வெளியே விடச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் பிடிவாதமாக திருவிழா முடிந்தபிறகே சுவாமிகளை வெளியே விடமுடியும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். சுவாமிகளுக்கு கெடுதல் செய்தால் பெரும் அபாயத்தைச் சந்திக்க வேண்டிவரும் என்று மக்கள் எச்சரித்தனர். இன்ஸ்பெக்டர் அதை இலட்சியம் செய்யவில்லை.

ஆனால் அடுத்த அரைமணியில் போளூரிலிருந்து அவருக்குத் தந்தி வந்தது. அவர் மனைவி கொடுத்திருந்தாள். இன்ஸ்பெக்டரின் ஐந்து வயது மகன், அறைக்குள் சென்று கதவைத் தாழ் போட்டுக் கொண்டான். “கதவைத் திறக்கத் தெரியாமல் பயந்து அழுது, மூர்ச்சையாகக் கிடக்கிறான். உடனே புறப்பட்டு வரவும்” என்று தந்தி தெரிவித்தது.

இன்ஸ்பெக்டர் அவசரமாகக் புறப்பட்டு போளூருக்குச் சென்றார். வீட்டின் முன்னால் பெரும் கூட்டம் கூடியிருந்தது. அறையில் ஜன்னல் எதுவும் இல்லை. மேலும் கதவை உடைத்து எடுக்கமுடியாத வகையில் அந்த அறை அமைந்திருந்தது.

அந்த நிலையில் திருவண்ணாமலையிலிருந்து அவருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. அதில் மகானை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்யும் படியாக மக்கள் கேட்டிருந்தனர். அவர் மனைவி இந்த விஷயத்தை அறிந்து பதறினாள். அவளுக்கு சேஷாத்திரி சுவாமிகளைப் பற்றித் தெரியும். “மகானின் பெருமை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டீர்கள். அந்தப்பாபம் தான் நம் மகன் இப்போது அறைக்குள் சிக்கிக் கொண்டான். அவரை முதலில் வெளியே விடச் சொல்லுங்கள்” என்று அழுதாள்.

இன்ஸ்பெக்டருக்கு தன் தவறு புலப்பட்டது. சுவாமிகளை விடுவிக்கும்படி திருவண்ணாமலைக்கு தந்தி ஒன்று கொடுத்தார். அவரே வியந்து போகும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

அடுத்த இரண்டாவது நிமிடம் அறைக்குள் கிடந்த அவருடைய மகன் மயக்கம் தெளிந்து எழுந்தான். வெளியே இருப்பவர்கள் சொல்லியதைப் புரிந்து கொண்டு, முரண்டு செய்யாமல், அச்சம் கொள்ளாமல் தானே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். இது எப்படி நடந்தது? ஆச்சரியப்பட்டுப் போனார் இன்ஸ்பெக்டர். சுவாமிகளின் மகத்தான சக்தியை அறிந்த அவர் அன்றே குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்று, சேஷாத்திரி சுவாமிகளை வணங்கி தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

தட்டைத் தட்டி விட்டால் தோஷம் விலகும்.

திருவண்ணாமலை டேனிஷ் மிஷின் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுபவர் வேங்கடராம ஐயர் என்பவர். சேஷாத்திரி சுவாமிகளின் மீது அளவுகடந்த பக்தியும், ஈடுபாடும் கொண்ட அந்த அன்பரின் மகள் இராஜம்மாளுக்கு விமரிசையாக திருமணம் நடந்து கொண்டிருந்தது. அன்று காலை சேஷாத்திரி சுவாமிகள் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார்.

இவர் என்ன கலாட்டா செய்யப்போகிறாரோ? என்று சிலர் பயந்தனர். வேங்கடராம ஐயர் மட்டும் மிகுந்த சந்தோஷத்தோடு தேடிப்போன தெய்வம் தன் வீடு தேடி வந்ததாக நினைத்து, மாங்கல்யம், பூ, பழம் ஆகியவற்றோடு இருந்த தாம்பாளத்தை சுவாமிகளின் முன்னால்ஆசிவழங்க நீட்டினார்.

சுவாமிகள் ஆசிவழங்காமல், தட்டைத் தட்டிவிட்டார். தாலியும் மற்ற மங்கலப் பொருள்களும் தரையில் சிதறின. இதைப் பார்த்து திருமணத்திற்கு வந்தவர்கள் ‘இப்படி அமங்கலமாக நடந்து கொள்கிறாரே’ என்று பொருமினர். ஆனால் ஐயர் மட்டும் புன்னகையோடு, சிதறிய பொருள்களை எடுத்து தாம்பாளத்தில் வைத்துக் கொண்டே “இது மிக நல்ல சகுனம்” என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதோடு சுவாமிகளிடம் ஆசீர்வாதம் வேண்டினார்.

ஆனால் சுவாமிகள் யாருமே எதிர்பாராத மற்றொரு செயலையும் செய்தார். மணமகளின் அருகே நின்றிருந்த ஐயரின் இரண்டாவது மகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு, திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார். இராஜம்மாள் திருமணம் ஆகி அறுபது ஆண்டுகளுக்கு மேல் கணவருடன் இனிமையாக வாழ்க்கை நடத்தினாள். அது தான் சுவாமிகளின் ஆசீர்வாத பலன் என்பது. அவளுக்கு நேர இருந்த தாலிதோஷத்தை நீக்கவே அவர் அன்று பலர் முன்னிலையில் தாலிவைத்திருந்த தாம்பாளத்தைத் தட்டிவிட்டிருக்கிறார்.

வாய் எச்சில் தண்ணீர் நோய் நீக்கும் அருமருந்து

சேஷாத்திரி சுவாமிகள் தினமும் ஒரு முறையாவது திருவண்ணாமலையை வலம் வருவார். சில தினங்களில் நான்கைந்து முறை கூட அப்படி நடப்பார். மற்ற நேரங்களில் அண்ணாமலையார் கோவிலின் நடன மண்டபத்திலோ அல்லது விருபாக்ஷி குகையிலோ அவரைப் பார்க்கலாம்.

அவரது நடவடிக்கைகள் வேடிக்கையாக பித்துப் பிடித்தவரின் செயலாகவே பார்ப்பவர்களுக்குத் தோன்றும். சுவாமிகள் சிவகங்கை தீர்த்தத்தில் குதித்துக் குளிப்பார். அப்படியே எழுந்து வருவார். கரையில் நிற்பவர்களின் மீது ஈரவேட்டியைப் பிழிந்து தண்ணீரைத் தெளிப்பார். வாயில் நீரை எடுத்து வந்து அதை எதிரில் வருபவர்கள் மீது துப்புவார்.

அவர் கொப்பளித்த தண்ணீர் பலபேருடைய நோய்களை நீக்கியிருக்கிறது. அவரது எச்சில் பட்ட தண்ணீர் பலபேருடைய வாழ்வில் தோல்விகளைப் போக்கி வெற்றிகளைத் தந்திருக்கிறது. அவர் வேட்டியிலிருந்து தெறித்த தண்ணீர் பலபேருக்கு மன அமைதியை அளித்திருக்கிறது. எனவே சுவாமிகள் தீர்த்தமாட குளத்தினுள் குதித்து விட்டால் கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றி நிற்பார்கள். அவர் கரையேறும் போது தண்ணீர் தெளித்தால் நாமும் வாழ்வின் தொல்லைகளிலிருந்து கரையேறி விடலாமே! அந்தப் பாக்கியம் நமக்குக் கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு அவர்கள் காத்திருப்பார்கள்.

இவ்வாறு பல சித்தாடல்களை விளையாட்டாக நடத்திய அந்த மகாபுருஷர் 1929ஆம் ஆண்டு மார்கழி மாதம் முக்தி அடைந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்களோடு பகவான் ரமணரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். திருவண்ணாமலையில் ரமணாச்சிரமத்திற்கு அருகில் சேஷாத்திரி சுவாமிகளின் ஆசிரமம் அமைந்திருக்கிறது. அந்த மகானின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதிக் கோவில் இன்று உலகம் முழுவதும் ஞான ஒளியைப் பரப்பி வருகிறது.

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum