Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கரிகாலன் கட்டிய சிவாலயம்
Page 1 of 1
கரிகாலன் கட்டிய சிவாலயம்
காசி லிங்கம் | அன்னை காசி விசாலாட்சி | ஸ்ரீ காசி விஸ்வநாதர்
கரிகால் சோழனின் பெருமையை இன்றும் தமிழ்நாட்டில் பறை சாற்றிக் கொண்டிருக்கும் அற்புதமான வரலாற்றுச் சான்றாக ஒரு சிவாலயம் திகழ்கின்றது.
திருச்சிக்கு அருகே உள்ள கிராமம், சர்க்கார் பாளையம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வூர். இங்குதான் கரிகாலன் கட்டிய சிவாலயம் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர், காசி விஸ்வநாதர். இறைவி, விசாலாட்சி அம்மன்.
இந்த ஆலயத்தின் வரலாறு என்ன? கரிகாலன் உறையூரை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட நேரமது. காவிரி அன்னை தன் விருப்பம் போல் பரந்து விரிந்து, ஊரெங்கும் பாய்ந்து கொண்டிருந்தாள்.
காவிரியைக் கட்டுப்படுத்த துணை வாய்க்கால்களோ, அணைகளோ கிடையாது. இதனால் வெள்ளம் வரும் போதெல்லாம் ஊருக்குள் தண்ணீர் புகுந்து, குடியிருப்பு மற்றும் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தி வந்தது.
மக்கள் பரிதவித்தனர். "இதற்கு என்னதான் முடிவு?' என்று, மக்கள் மன்னனிடம் சென்றனர்; தாங்கள் படும் இன்னல்களையும், துயரங்களையும் அவனிடம் எடுத்துக் கூறினர். "உரிய நடவடிக்கை எடுக்கிறேன்' என்று கூறி அவர்களை அனுப்பிய மன்னன், யோசிக்கத் தொடங்கினான்.
"என்ன செய்வது? காவிரியில் ஒரு அணையைக் கட்டுவதுதான் இதற்கு உரிய நிவாரணம்' என்று உணர்ந்த மன்னன், தனது பரிவாரங்களுடனும் படைவீரர்களுடனும் அணை கட்ட உரிய இடத்தைத் தேர்வு செய்யப் புறப்பட்டான். அவன் சென்ற வழியில் இருந்தது சர்க்கார் பாளையம் என்ற கிராமம். (அந்தக் காலத்தில் இவ்வூரின் பெயர் வேறானதாக இருக்க வேண்டும்).
மன்னனும், படைவீரர்களும் அந்தக் கிராமத்தின் அருகே வந்தபோது, காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் உடைப்பு ஏற்பட்டு, கிராமத்திற்குள் தண்ணீர் பாய்ந்தது. இதனால் மன்னனும், படைவீரர்களும் மேலே செல்ல இயலவில்லை. அவர்கள் பயணம் தடைபட்டது. காவிரியின் உடைப்பை அடைக்க படை வீரர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. செய்வதறியாது தவித்து நின்றான் கரிகாலன். அவன் மனம் இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்தது.
""இறைவா? இந்தத் துயரிலிருந்து நான் மீள முடியாதா? என் மக்களை நான் காப்பாற்ற முடியாதா?'' என்று மனமுருக வேண்டினான். அப்போது ஒரு அசரீரி திடீரென்று ஒலித்தது. ""மன்னா! இந்த இடத்தில் நீ ஒரு கோயில் கட்டு. உடைப்பு நிற்கும்'' என்றது அந்தக் குரல்.
மனம் சிலிர்த்தான் மன்னன். கண்கள் கலங்கினான். கரங்கூப்பி விண்ணைப் பார்த்தான். ""அப்படியே செய்கிறேன்'' என்றான் நெகிழ்ந்த மனதோடு. வெள்ளம் வடியத் தொடங்கியது. மன்னன் தன் படைவீரர்களைக் கொண்டு அந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டத் தொடங்கினான். அந்தக் கோயில்தான் சர்க்கார் பாளையத்தில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம்.
பின் அங்கிருந்து 11 கி.மீ. தொலைவில் காவிரியில் ஓர் அணையையும் கட்டத் தொடங்கினான் மன்னன் கரிகாலன். அதுதான் கல்லணை!
"கோயிலைக் கட்ட முடிவு செய்த மன்னன், சிலரை காசிக்கு அனுப்பி ஒரு சிவலிங்கம் கொண்டு வரும்படி கூறினானாம். அவர்களும் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதற்குள் இங்கே கோயில் திருப்பணிகள் விறுவிறுவென நடந்தேறியுள்ளன. கும்பாபிஷேக நாளும் குறிக்கப்பட்டது. ஆனால், காசிக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. கோயில் விஷயங்களில் தேர்ந்தவர்களைக் கலந்து ஆலோசித்தான் மன்னன்.
குறிப்பிட்ட நாளில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடிப்பதே நல்லது என அவர்கள் அறிவுரை கூறினர். வேறு ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துவிடலாம் என்றும் அவர்கள் கூறினர்.
உடனே சிற்பிகளால் ஒரு சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகத்தையும் நல்ல முறையில் நடத்தினான் கரிகாலன். சில நாட்கள் கடந்த பின், காசிக்குச் சென்றவர்கள் தங்களுடன் ஒரு சிவலிங்கத்துடன் திரும்பி வந்தனர். "புதிய சிவலிங்கத்தை என்ன செய்வது?' என்று யோசித்தான் மன்னன். அந்த சிவலிங்கத்தை அலட்சியப்படுத்தாத அவன், அதனை அருகே இருந்த தல விருட்சமான வில்வ மரத்தடியில் பிரதிஷ்டை செய்தான். அந்தக் காசி லிங்கத்திற்கும் மூலவருக்கு நடைபெறும் ஆராதனைகளும், அபிஷேகங்களும் நடைபெற ஏற்பாடு செய்தான்" என்று இப்பகுதியில் இக்கோயில் கட்டப்பட்ட விதம் பற்றிய கர்ண பரம்பரைச் செய்தி உலவுகிறது.
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் எதிரே சற்றே உயர்ந்த மகாமண்டபம் இருக்கின்றது. வலது புறம் அன்னை காசி விசாலாட்சி, நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். எதிரே பலிபீடமும், நந்தியும் இருக்க, அர்த்த மண்டப வாயிலில் துவார பாலகர்களின் திருமேனிகள் கருங்கற்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலே கஜலட்சுமியின் சிற்பம் உள்ளது.
அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன் காசி விஸ்வநாதர், லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில், காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட "காசி லிங்கம்' தனி மண்டபத்தில் பிரதிஷ்டை ஆகியுள்ளது. எதிரே நந்தி பகவான் அருள்பாலிக்க, இறைவனின் பின்புறம் தல விருட்சமான வில்வ மரம் உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களுக்கு தனி மண்டபம் உள்ளது.
இறைவனின் சந்நிதியின் முன் உள்ள மகாமண்டபத்தின் உச்சியில் 12 ராசிகளின் உருவங்களும் கருங்கற்களில் செதுக்கப்பட்டு பொறிக்கப்பட்டுள்ளது இந்த ஆலயத்தில் உள்ள சிறப்புகளில் ஒன்றாகும்.
இந்த ஆலயம் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. காலை 7 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 1/2 முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றும் திருவிழா, இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று பால் குடம், அலகு காவடி, தீ மிதி என்று இந்த ஆலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
ஆடி, தை வெள்ளிகளில் இங்கு திருவிளக்குப் பூஜை நடைபெறுகின்றது. ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர். சிவராத்திரி அன்று ஐந்து கால பூஜையும், பிரதோஷம், சோமவாரம், தை, சித்திரை மாதப் பிறப்புகள், நவராத்திரி, சிவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
ஆலயத்தின் அருகே காவிரி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுவே இந்த ஆலயத்தின் தீர்த்தமும் கூட. பழமையான இக்கோயிலில் தற்போது சில திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சியிலிருந்து இந்த ஆலயம் செல்ல நிறைய நகரப் பேருந்துகள் உள்ளன. கல்லணை செல்லும் நகரப் பேருந்துகள் சில இந்த ஆலயம் வழியே செல்கின்றன. ஆட்டோ, கால் டாக்ஸியிலும் வரலாம். காசிக்குப் போய் காசி விஸ்வநாதரைத் தரிசிப்பதால் பெறும் பலனை இங்கு அருள்பாலிக்கும் இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் பெறலாம் என நம்புகின்றனர் சுற்று வட்டாரத்திலுள்ள பக்தர்கள். காசிக்குப் போக வசதி, வாய்ப்பு இல்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து ஈசனின் அருள் பெற்று மகிழலாமே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum