இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இனிய மொழியும் இணைப்பு மொழியும்!

Go down

இனிய மொழியும் இணைப்பு மொழியும்! Empty இனிய மொழியும் இணைப்பு மொழியும்!

Post by Dheeran Thu Dec 11, 2014 12:14 pm

இனிய மொழியும் இணைப்பு மொழியும்! Css1305

மகாகவி பாரதியார் பிறப்பால் தமிழனாகவும், வாழ்க்கையால் இந்தியனாகவும், எண்ணத்தால் உலகக் குடிமகனாகவும் திகழ்ந்தவர். அவர் உள்ளம் உலகின் எந்த மூலையில் ஏழைகள் வாடினாலும் விம்மி விம்மி அழுதது. எனினும், அவர் வாழ்நாளெல்லாம் இந்தியாவின் விடுதலைக்காகவும் தமிழின் மேன்மைக்காகவும் மேற்கொண்ட முயற்சிகள் பலப்பல.

நாற்பதாம் அகவையைக்கூடத் தொடாத அவர் கவிஞராய், கட்டுரை, சிறுகதை ஆசிரியராய், இதழாசிரியராய், மொழிபெயர்ப்பாளராய் அளித்துள்ள பங்களிப்பு வியப்பூட்டுவது. அவரது மொழிக்கொள்கை நமக்கு வழிகாட்டுவது.

அவரது மொழிச்சிந்தனை மரபுவழிப்பட்டது. நம் சமயச் சான்றோர்கள் தமிழையும் வடமொழியையும் சமமாகப் போற்றியவர்கள். திருநாவுக்கரசர் திருக்கடம்பந்துறை இறைவனை, "ஆரியம் தமிழோடு இசையானவன்' என்றும், குலசேகர ஆழ்வார் அரங்கநகர் அழகனை, "அந்தமிழ் இன்பப் பாவினை அவ்வடமொழியை' என்றும் கொண்டாடுகின்றனர்.

அருணகிரிநாதர், தாயுமானவர் ஆகியோரின் வடமொழிப் புலமைக்கு அவர்களின் பாடல்களே சான்று. இந்த மரபில் தோன்றிய பாரதியாரின் தமிழ்ப்பற்று வடமொழிக்குப் பகையாக அமையவில்லை.

இந்தியா எங்கும் வடமொழி பரவ வேண்டும் என்பதும் தமிழ்நாட்டில் தமிழ் அரசோச்ச வேண்டும் என்பதும் அவரது வேட்கை. "அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும்' என்கிறார்.

தைரியம் என்னும் கட்டுரையில், "ஸம்ஸ்க்ருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்' என்கிறார்.

ஜப்பானிலும் சீனாவிலும் வடமொழி படித்தவர்கள் இருப்பதைக் காட்டுகிறார். "நம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூரணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக. எனினும், தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக' என்று வாழ்த்துகிறார்.

இடைக்காலத்தில் வடமொழிப்பற்றாளர் சிலர் தமிழை, நீச பாஷை என்று இகழ்ந்தது தமிழர்களிடையே வடமொழி வெறுப்பைத் தோற்றுவித்தது. மேலும், எல்லைமீறி வடசொற்கள் தமிழில் கலந்தது தனித்தமிழ் இயக்கம் தோன்றக் காரணமாயிற்று.

எனினும், இரு மொழிகளையும் இரு கண்களாகப் போற்றியவர்கள் உண்டு. அப்பெருமக்களுள் ஒருவரே பாரதியார். தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து, "தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சம்ஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பது மெய்யே.

எனினும் வடமொழிக் கலப்புக்கு முந்தித் தமிழுக்கு வேறுவகையான இலக்கணமிருந்து ஒருவேளை பின்னிட்டு மறைந்திருக்கக் கூடுமென்று நினைப்பதற்குப் பல ஹேதுக்கள் இருக்கின்றன. இஃது எவ்வாறாயினும் சம்ஸ்கிருத பாஷையின் கலப்புக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் மிகவும் உயர்ந்த நாகரிகமொன்று நின்று நிலவி வந்ததென்பதற்கு அடையாளமாகத் தமிழில் மிக உயர்ந்த தரமுள்ள பல பழைய இலக்கிய நூல்கள் காணப்படுகின்றன' என்று குறித்துள்ளார்.

அது தமிழ் "உயர்தனிச் செம்மொழி' என்று தெளியாத காலம் என்பதையும் தொல்காப்பியரே வடமொழியோடு தொடர்புபடுத்திச் சில விதிகளைக் கூறுகிறார் என்பதையும் உளங்கொண்டால் பாரதியாரின் கூற்றில் உள்ள நேர்மை விளங்கும்.

அவரது தமிழ்நடை, எளிய மணிப்பிரவாள நடை. அதில் தமிழ்ச்சொற்களோடு ஓரளவு கற்றவர்கள் அறிந்த வடசொற்கள் உண்டு. புழக்கத்தில் உள்ள "ஜாப்தா', "கபாத்து', "ஐவேஜி', "ஜப்தி' போன்ற பிறமொழிச் சொற்கள் உண்டு. அங்கங்கே "பதறின காரியம் சிதறும்', "பாம்பென்றால் படையும் நடுங்கும்' போன்ற பழமொழிகளும் உண்டு. ஆனால் ஆங்கிலச் சொல்லுக்கு இடமில்லை.

ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்க இயலாதபோது, அவற்றை மேற்கோள் குறியிட்டுக் காட்டுகிறார். "ரிஷி', "ருஜு', "ஜாதி', "ஜீவன்', "ஸம்ஸ்க்ருதம்', "ஸம்பத்து', "மஹாலக்ஷ்மி', "கக்ஷி', "பக்ஷி' என்று வடசொற்களை வடவெழுத்துகளோடே எழுதுகிறார். தமிழ்ப்படுத்தும்போது உண்டாகும் ஒலிமாற்றம் அவருக்கு உவப்பாக இல்லைபோலும்.

எனினும், அவரது நடையில் உயிர்ப்பு இருக்கிறது. ஞானரதத்தில் ஏறியவர்கள் சீக்கிரம் இறங்குவதற்கு விரும்புவதில்லை. சந்திரிகையின் கதையில்தான் எவ்வளவு கவிதைப்பாங்கான தொடர்கள்

"தமிழ் வளர அறிவியல் நூல்களைத் தமிழ்மொழியில் கொண்டுவர வேண்டும்' என்கிறார். "தமிழா, பயப்படாதே, ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்' என்பது அவரது கட்டளை.

அறிவியல் கலைச்சொல்லாக்கத்தில் அவருக்குக் கொள்ளை ஆர்வம். அறிவியல் கலைச்சொல்லை "சாஸ்த்ர பரிபாஷை' என்று குறிக்கிறார். அந்த நோக்கத்தோடு சேலத்தில் இராஜாஜியும், வேறு சிலரும் சேர்ந்து தொடங்கிய சங்கத்தை வரவேற்கிறார்.

ஆனால், அதன் முதலாவது மாத இதழ் ஆங்கிலத்தில் அமைந்ததற்கு ராஜாஜி தரும் அமைதியை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சொல்லாக்கத்தில் கைக்கொள்ள வேண்டிய முறை குறித்தும் சிந்தித்துள்ளார். "ஆக்ஸிஜன்', "ஹைட்ரஜன்' முதலியவற்றிற்கு வழக்கிலுள்ள "பிராணவாயு', "ஜலவாயு' போன்றவற்றை வழங்க வேண்டும். தமிழ்ச்சொற்கள் அகப்படாவிட்டால் வடசொற்களை வழங்கலாம்.

இவ்விரு மொழிகளிலும் பெயர்கள் அகப்படாத நிலையில், ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தலாம். பொருள்களின் குணங்கள், செயல்கள், நிலைமைகள் இவற்றுக்கு ஆங்கிலம் ஒருபோதும் வழங்கக்கூடாது என்பது அவர் காட்டிய வழிமுறை.

இதழாசிரியராக, "ஏஷியாடிக் ரெவ்யூ', "ஹிந்துஸ்தான் ரெவ்யூ', "மாடர்ன் ரெவ்யூ' போன்ற ஆங்கில ஏடுகளில் வந்த கட்டுரைகளை உடனுக்குடன் மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது. அவரே, "ஹியூமன் ரைட்ஸ்' என்பதனை "மானுஷிக உரிமைகள்' என்றும், "கமிட்டி' என்பதனை "ராசி' என்றும், "வெல்விஷர்ஸ்' என்பதனை "இஷ்டர்கள்' என்றும் தமிழ்ப்படுத்தியுள்ளார்.

"கல்லூரி', "பல்கலைக்கழகம்', "முதல்வர்' ஆகிய சொற்கள் தோன்றாத காலம். அவற்றை முறையே "கலாசாலை', "சர்வகலாசாலை', "தலைமை வாத்தியார்' என்று குறிக்கிறார். பல்கலைக்கழக ஆட்சிக் குழுவினை "ஆட்சி மண்டலம்' என்கிறார்.

அறிவியலை "சாஸ்திரம்' என்றும், அறிவியலாளரை "சாஸ்திரிகள்' என்றும், பொறியாளரை "யந்திரி' என்றும் குறிக்கிறார். "அந்தக் கருவிகளின் நேர்த்தியைப் பார்த்து ஐரோப்பிய சாஸ்திரிகளும், யந்திரிகளும் ஆச்சரியப்படுகிறார்கள்'. "சாஸ்திர (ஸயின்ஸ்) வார்த்தை ஓரிரண்டு சொல்லி முடித்துவிடுகிறேன்' என்பவை அவரது சொற்றொடர்கள்.

இயற்பியலை "இயற்கை நூல் (பிஸிக்ஸ்)' என்றும், வேதியலை "ரசாயனம் (கெமிஸ் ட்ரி)' என்றும் ஆங்கிலப் பெயர்களை அடைப்புக்குறிகளுக்குள் தந்து எழுதுகிறார். உடற்கூற்றியலைச் "சரீர சாஸ்திரம்' என்றும், விலங்கியலை "ஜந்து சாஸ்திரம்' என்றும், பயிரியலைச் "செடிநூல் (ஸ்தாவர சாஸ்திரம்)' என்றும் தமிழாக்கம் செய்துள்ளார்.

புவியியலுக்கு அவர் தந்துள்ள மொழிபெயர்ப்பு "பூமி சாஸ்திரம்'. வானியலை "அண்ட சாஸ்திரம்' என்கிறார்.

ஐரோப்பிய மொழிகள் லத்தீன், யவனச் சொற்களைக் கைக்கொண்டிருப்பது போல, அந்தச் சொற்களை இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் ஒரே காலத்தில் வழங்கினால் கலைச்சொல் பயன்படுத்துவதில் ஒற்றுமை ஏற்படும் என்று கருதினார்.

பாரதியாரின் நடை செல்வாக்கு இழந்திருக்கலாம்; சொல்லாக்கங்கள் காலச் சல்லடையின் சலிப்பில் காணாமல் போயிருக்கலாம். ஆனால், அவரது முயற்சியும் நோக்கமும் வணக்கத்திற்குரியன. தமிழ் வளர்ச்சிக்கு அடியுரமாய் அமைந்தன.

"இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் கலந்திருப்பதும் இந்தியப் பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழ்வதுமான வடமொழிக்கல்வி பரவ வேண்டும்', "ஒரு மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கலாமே தவிர மொழியை எதிர்த்தல் முறையன்று', "மொழி வளர்ச்சிக்குக் கலைச்சொல்லாக்கம் இன்றியமையாதது' - இவை பாரதியார் நமக்கு உணர்த்தும் பாடங்களாகும்.

இனிய மொழி தமிழ், இணைப்பு மொழி வடமொழி - இதுவே பாரதியாரின் மொழிக்கொள்கை.

By தெ. ஞானசுந்தரம்
First Published : 11 December 2014 01:59 AM ஈஸ்ட்
கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).
Dinamani
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum