இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

2 posters

Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by ஆனந்தபைரவர் Thu Aug 05, 2010 9:53 pm

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் தொண்டை நாட்டுத் தணிகைத் திருப்பதியில் சைவ வேளாளர் குலத்தில் அபிஷிக்தர்மரபில் அவதாரம் செய்தருளினார். தக்க பிராயத்தில் கற்பவை கசடறக்கற்று, சிவஸ்தல யாத்திரை செய்யத் தொடங்கினார். சிதம்பரம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்து, ஸ்ரீ ஞானக்கோமுத்தியாகிய திருவாவடுதுறையைச் சார்ந்தார். திருமடாலயத்தில் திருக்கைலாச பரம்பரைச் சித்தாந்த சைவ ஞான பாநுவாகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தி யைத் தரிசித்து, திருவருள் நோக்கஞ் சிந்திக்கப் பெற்றார்.

சிவாகமத்தில் இரண்டு லக்ஷ சுலோகமும், மெய்கண்ட சாத்திரம் பதினான்கும், பண்டாரசாத்திரம் பதினான்கும் ஆகிய ஞானநூல்களை நன்குணர்ந்த ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகராம் 12 ஆம் குருமஹாசந்நிதானம் அவர்களின் திவ்ய தரிசனத்தை முனிவர் பெற்றுய்ந்தார். ஞான தேசிகர் அவர்பால் திருவுளமிரங்கித் தமது துவிதீய ஆசிரியராகிய ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்கு ஆஞ்ஞை செய்தருள, அத்தேசிக சுவாமிகள் கச்சியப்ப முனிவர் பெருமானுக்கு சமய தீக்ஷையும், விசேட தீக்ஷையும், மந்திர காஷாயமும் கொடுத்தருளினர்.அவ்வண்ணம் தீக்ஷை பெற்ற கச்சியப்ப முனிவரர், அகத்திய மகாமுனிவர் வரத்தினால், எளிதிலே வடமொழிக்கடலும் தென்மொழிக்கடலும் கரைகண்டுணர்ந்து, பேரூர் ஸ்ரீ வேலப்ப தேசிகராகிய ஞானாசாரியரிடத்தே அநுக்கிரகம் பெற்று, மெய்யுணர்வின் முற்றுப்பேறுடையராய்ச் சித்தாந்தசைவ சிவஞானபோத திராவிட மகாபாஷ்ய கர்த்தராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகளை வித்தியா குருவாகக் கொண்டு, அம்மெய்ஞ்ஞான முனிவரிடத்தே இலக்கணம், இலக்கியம், தர்க்கம், சாத்திரம் ஆகியவற்றை ஐயந்திரிபற ஓதியுணர்ந்து, அச்சிவஞான யோகிகள் மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்தவராய் வீற்றிருந்தார்.


இவர்களது வாக்கு வல்லபத்தையும், பிரசங்க சாதுரியத்தையும் புகழாதாரில்லை. இவர்கள் செய்யுளியற்றும் விரைவு, நெட்டுருப் பண்ணிய பழம்பாடல் ஒப்பித்தல்போல இருந்தது என்று சொல்லுவர்.


கச்சியப்ப முனிவரர் அப்புக்ஷேத்திரமாகிய திருவானைக்காவில் எழுந்தருளியபோது, திருவானைக்காப் புராணமும், பூவாளூர்ப் புராணமும் மொழிபெயர்த்தருளினார். மேலைச் சிதம்பரமாம் திருப்பேரூருக்கு எழுந்தருளி, பேரூரர் பெருமானைக் காலந்தோறும் தரிசித்து வீற்றிருந்தருளினார். ஆண்டு மழையின்றி வெப்ப மிகுதியால் மக்கள் நலிவுறுவது கண்டிரங்கி, அரசம்பல வாணர் மீது அரிய பிரபந்தம் பாடி, மழை வருஷிக்கச் செய்து மக்களை மகிழ்வித்தருளினார். பட்டீசர் மீது அவர்கள் பாடிய பல பதிகங்கள் பலரது குட்டநோய் முதலியன போக்கின. அந்த ஸ்தலத்தின் மகிமையை உலகவர் அறிந்துய்யும் பொருட்டு அற்புத இலக்கியமாகிய பேரூர்ப் புராணத்தை மொழிபெயர்தருளினார்.அதன்பின்பு திருத்தணிகையை அடைந்து, ஆங்கே இயற்றமிழ்ப் போதகாசிரியர் விசாகப் பெருமாளையர், வித்துவான் சரவணப் பெருமாளையர் இருவருக்கும் பிதாவாகிய கந்தப்பையர் முதலாயினோருக்குக் கல்வி கற்பித்தருளினார். அப்போது, பல வித்துவான்களும் தமிழிலே புறச்சமயியாற் செய்யப்பட்ட சீவகசிந்தாமணியைப் பேரிலக்கியமாகக் கொண்டாடுதலைச் சித்தத்திலே கொண்டு, அதினினும் மாட்சிமை பெறத் திருத்தணிகைப் புராணத்தை மொழி பெயர்த்தருளினார். சொல்வளம், பொருட்சுவை, செய்யுணடை, சந்தம் ஆகிய இவற்றிலே வேறெந்த இலக்கியமும் இதற்கு மேம்பட்டிலதென்பதைப் புராணத்தை ஒதியுணர்ந்தோர் அறிவர் என்க.

முனிவரர் சிவத்தியான உறைப்பில் சிறந்தவராகத் திகழ்ந்தமையால், ஒரு சமயம் கந்தப்பையருக்குக் குன்ம நோயுண்காயபொழுது, தணிகையாற்றுப் படையைப் பாடி அதனைக் குணப்படுத்தினார். திருத்தணிகை பதிற்றுப் பத்தந்தாதி முதலிய பல பிரபந்தங்கள் அப்பெருமான் திருவாக்கில் மலர்ந்தன.

பின்பு சென்னை மாநகர்க்குச் சென்றபோது அவ்விடத்துள்ள சைவச் சான்றோர்கள் வேண்டிய வண்ணம் விநாயகபுராணம் என்ற இந்த அற்புத இலக்கியத்தையும், சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழையும் முனிவரர் சைவ உலகிற்கு வழங்கியருளினார். விநாயகபுராணம் அரங்கேற்றுஞ் சபைக்கு ஐயாப்பிள்ளை என்ற பெரும் செல்வர் "நாம் வர இதென்ன இராமாயணமா" என்று இகழ்ந்து பேசினர். முனிவரர் திருச்செவிக்கு இது எட்டியது. உடனே முனிவரர் தமது நூலை அரங்கேற்று முன்னர், இராமாயணத்தை எடுத்துக் கொண்டு யாவரும் வியக்கும் வண்ணம் முதல் ஆறு செய்யுளில் நூறுகுற்றம் ஏற்றினார். அதனைக் கேட்ட அச் செல்வந்தர் சுவாமிகளின் பொருமையையுணர்ந்து, நூறுவராகனும், பீதாம்பரம் முதலியவைகளும் பாதகாணிக்கையாக வைத்து சுவாமிகளின் பாதமலர்களில் வீழ்ந்து நமஸ்காரம் செய்து மன்னிப்பு வேண்டினார். விநாயக புராண அரங்கேற்று விழாவில் அடியுறையாகக் கிடைத்த இரண்டாயிரம் வராகனைக் கொண்டு, திருவாவடுதுறை ஆதீனபரமாசாரியராகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள் சந்நிதி மண்டபப் பணியினை அணிபெறச் செய்தருளினார்.திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளைவர்கள் தமது 21-ஆவது பிராயத்தில் திருவானைக்காக்கோயில் தர்மகர்த்தாவின் வீட்டில் முனிபுங்கவரின் திருவானைக்காப் புராணத்தைக் கண்டார். அந்நூலின் அற்புதச் சுவையில் மூழ்கிய பிள்ளையவர்கள் முனிவரர் அருளிச் செய்த விநாயக புராணத்தில் சில பகுதிகளையும், பூவாளூர்ப் புராணம், காஞ்சிப் பிராணம் ஆகியவற்றையும் தேடிக் கண்டுபிடித்து அவற்றின் இன்ப நலன்களை நுகர்ந்தார். இடையிடையே ஏற்பட்ட இயங்களை நீக்குவதற்குத் திருவாவடுதுறை ஆதினத் தொடர்பினைப் பெற்றாக வேண்டும் என்ற வேரவாவினைப் பிள்ளையவர்கள்பால் உருவாக்கியவை முனிவரது இந்த அருள் நூல்களே என்பதை உணர்க. துறைசை 16-ஆவது குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிய பரமாசாரிய சுவாமிகள் திருக்கண்ணோக்கிற்கு ஆட்பட்ட பிள்ளையவர்கள் முனிவரரின் நூல்களில் தமக்கு உள்ள ஈடுபாட்டினைத் தேசிகர் அவர்களிடம் புலப்படுத்தினார்.

விநாயக புராணத்தின் பாயிரத்தில் உள்ள

"மரந்துளைத்த கணையானுஞ் சோவெறிந்த திறலானு
மதிக்குந் தோறும்
சிரந்துளக்க அலைகடலுஞ் சேணிகந்த பெருவரையுந்
திறத்திற் குன்றக்
கரந்துளக்குங் குறுமுனிக்குங் கருத்தின்மயல் பூட்டியகை
தவஞ்சால் வெற்பின்
உரந்துளைத்த சேயிலைவேல் வலனுயர்த்த இளையவனை
யுளத்துள் வைப்பாம்"

என்னுஞ் செய்யுளில் வரும் "கரந்துளக்குங் குறுமுனிக்கு" என்னும் பகுதிக்குப் பிள்ளையவர்களுக்கு நெடுநாளாகப் பொருள் விளங்கவில்லை. பல ஆன்றோர்கள் கொடுத்த விளக்கத்தால் திருப்தியடையாத பிள்ளையவர்கள் தேசிகர்பால் இதனை விண்ணப்பம் செய்தனர். உடனே அவர் உள்ளங்கையையேந்தி மறித்துக் காட்டிக் கடலை உண்டது கையை ஏந்தினமையாலென்றும், விந்தமலையை அழுத்தியது கையைக் கவித்தமையாலென்றும் பொருள் கூறியருளிப் பிள்ளையவர்களை மகிழ்வித்தருளினார்.திரிசிரபுரத்தில் ஒருநாள் பிள்ளையவர்கள் இரவு பதினைந்து நாழிகைக்கு மேல் விழித்துக் கொண்டு முனிபுங்கவர் அருளிச் செய்த காஞ்சிப் புராணத்தின் இரண்டாங் காண்டத்தின் ஒரு பகுதியைப் படித்து அதன்பாலுள்ள சொற்சுவை, பொருட்சுவைகளை நுகர்ந்து இன்புற்றுக் கவிராக்ஷஸ கச்சியப்ப முனிவரது அருமை பெருமைகளை நினைந்து மனமுருகிக் கண்ணீர் வீழ்த்தியும், ஆடையால் கண்களைத் துடைத்தும் படித்துக் கொண்டேயிருந்தனர். இதனைக் கண்ணுற்ற ஒரு வேளாளப் பிரபு "புத்தகத்தத வாசித்தால் அழுகை வருமோ"? என்று இவரிடம் கேட்டு அதிசயமுற்ற செய்தியை மகாவித்துவான் சரித்திரத்தில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் சுவைபடக் கூறுகிறார். பிள்ளையவர்கள் சென்னைக்குச் சென்றபோது விநாயக புராணம் அரங்கேற்றப்பட்ட ஆலயத்தில் (ஐயாப்பிள்ளை தெருவில் உள்ள) ஸ்ரீ பிரசந்த விநாயகரையும், விநாயக புராணம் செய்வித்த சிதம்பர முதலியாரென்பவரின் பரம்பரையில் வந்த ஒரு பெரியவரின் அழைப்பால் குளத்தூர் ஸ்ரீ அமுதாம்பிகை சமேத ஸ்ரீ சோமேசரையும் தரிசனம் செய்தார்.

பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களைத் தங்கு தடையின்றி இயற்றிவரும் ஆற்றல் கைவரப் பெற்ற பிள்ளையவர்கள் "செய்யுள் செய்து வரும்பொழுது தடைப்பட்டால் கச்சியப்ப முனிவரைத் தியானிப்பேன். உடனே விரைவாகக் கருத்துக்களும், சொற்களும் தடையின்றி எழும்" என்று முனிபுங்கவரின் அருள் வண்ணத்தை அநுபவ வாயிலாக எடுத்துரைப்பதைக் காண்க.ஸ்ரீ சிவஞான சுவாமிகள் காஞ்சிப்புராணம் பாடி அரங்கேற்றும் போது சுவாமிகளின் மீது அழுக்காறு பூண்ட சிலர் கோயில் ஓதுவார் ஒருவரை ஏவி ஆட்சேபனை எழுப்பக் கூறினர். அரங்கேற்றம் தொடங்கியது. விநாயக வணக்கங்களாகிய முதல் இரண்டு செய்யுட்களைப் படித்துப் பொருள் கூறியபின் சுவாமிகள் மூன்றாவது செய்யுளாகிய ஸ்ரீ நடராஜப் பெருமான் துதியாகிய "சங்கேந்து மலர்க்குடங்கை" என்று தொடங்கும் செய்யுளுக்குப் பொருள் கூறியருளினார். அப்போது அந்த் ஓதுவார் "முத்தி நகரங்கள் எழிலொன்றும், பிரசித்த ஸ்தலுமுமாகிய இந்தக் காஞ்சீபுரத்திற்குப் புராணம் பாட வந்த நீங்கள் எப்படிச் சிதம்பரம் நடராஜருக்கு முதலில் துதி கூறலாம்? எங்கள் ஸ்ரீ ஏகாம்பர நாதர் துதியல்லவா முதலில் வரவேண்டும்?" என்று ஆட்சேபித்தார். சுவாமிகள் ஸ்ரீ சபாபதியின் பெருமை முதலியவற்றைத் தக்க காரணங்களால் எடுத்துரைத்தும் ஓதுவார் விதண்டாவாதம் செய்தார்.

இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டே அருகில் இருந்த ஸ்ரீகச்சியப்ப முனிவர், சுவாமிகளிடம் "இவரை அடியேன்பால் விட்டு விடுக; நான் பார்த்துக் கொள்ளுகிறேன்" என்று கூறி ஓதுவாரைட் தம்பால் அழைத்தார். இந்த ஸ்தலத்து தேவாரப் பதிகங்களில் ஒன்றினைப் பாடுமாறு ஓதுவாரை நோக்கிக் கூறினார். அவர் "திருச்சிற்றம்பலம்" என்று தொடங்கினார். அப்பொழுது முனிவர் பெருமான் ஆட்சேபித்த வித்துவான்களைப் பார்த்து "இவர் 'திருச்சிற்றம்பலம்' என்று தொடங்குகின்றாரே; இது உங்கட்குப் பொருத்தந்தானா? இவரை நீங்கள் இந்தச் சந்நிதியில் இந்த ஸ்தலத்துத் தேவாரப் பதிகங்களைப் பிருதிவியம்பலம் என்று சொல்லி ஆரம்பிக்கும்படி செய்யக்கூடாதா? என்ற அற்புதக் கேள்விக்கணை விடுத்தருளினார். ஓதுவார் உள்ளிட்ட அனைவரும் வாயெடாது ஊமர்கள் போல இரு முனி சிரேஷ்டர்களையும் தலைவணங்கி மன்னிப்பு வேண்டிப் பெற்றனர். இத்தகைய அருள் ஞான பாநுவாகிய முனிவரர் தமது ஆசிரியர் திருவாக்கைச் சிரமேற் கொண்டு காஞ்சிப் புராணத்து இரண்டாங் காண்ட மொழிபெயர்ப்புச் செய்தருளி, கச்சியானந்தருத்திரேசர் வண்டுவிடுதூது, கச்சியானந்த ருத்திரேசர் பதிற்றுப் பத்தந்தாதி, பஞ்சாக்கர தேசிகரந்தாதி முதலிய பல நூல்களை இயற்றியருளினார். சைவ உலகிற்கு விநாயக புராணம் போன்ற ஒப்புயர்வற்ற சிவஞானக் கருவூலங்களை வழங்கியருளிய ஸ்ரீ கச்சியப்ப முனிவரர் திருவாவடுதுறை ஆதீன சிவஞான சூடாமணியாகத் திகழ்ந்து, காஞ்சி மாநகரில் சாலிவாகன சகாப்தம் 1712-ஆம் ஆண்டு சாதாரண வருஷம் சித்திரை மாதம் 11- ஆம் நாள் மங்கள வாரத்தில் புனர்பூச நக்ஷத்திரமும், பூர்வபக்ஷத்துச் சப்தமியுங் கூடிய கும்ப லக்னத்தில் சிவபரிபூரணமுற்றனர். (கி.பி.1790)

ஏர்தரு சாலி வாகன சகாத்தம்
ஆயிரத் தெழுசதத் தொருபத்
திரண்டின்மேற் சாதா ரணவரு டத்தில்
இயைதரு சித்திரைத் திங்கள்
சார்தரு தேதி பத்தினோ டொன்று
தகுசெவ்வாய் வாரம்பூ ருவத்திற்
சத்தமி புனர்பூ சத்திரு நாளில்
தவலறு கும்பலக் கினத்திற்
சீர்திரு துறைசை வாழ்சிவ ஞான
தேவன் மா ணாக்கருண் முதன்மை
திகழ்ந்துள கச்சி யப்பமா முனிவன்
திருப்பெருங் காஞ்சியி லெய்திச்
சேர்தரு மடியார் தமதக விருளைத்
தினகரன் முன்னிரு ளென்னத்
திருந்துதன் னருளா லகற்றிவீ டுறுத்திச்
சிறந்தபூ ரணமடைந் தனனே.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு Empty Re: ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு

Post by ந.கார்த்தி Fri Feb 17, 2012 6:55 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum